திருவண்ணாமலை மாவட்டம் செண்பகத்தோப்பு அணையில் இருந்து வினாடிக்கு 2100 கனஅடி நீர் திறக்கப்பட்டு வருவதால் கரையோர பகுதிகளுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

ஃபெஞ்சல் புயல் காரணமாக திருவண்ணாமலை மாவட்டத்தில் தொடர் கனமழை பெய்து வந்தது. இதனால் தாழ்வான பகுதிகளில் தண்ணீர் தேங்கியிருந்து. கடந்த சில நாட்களாக மாவட்டத்தில் மழை குறைந்திருந்த நிலையில் நேற்று இரவு ஜவ்வாது மலை பகுதியில் பலத்த மழை பெய்தது. இதன் காரணமாக ஜவ்வாது மலை அடிவாரத்தில் படவேடு பெருமாள்பேட்டையில் உள்ள செண்பகத்தோப்பு அணையில் நீர்மட்டம் கிடுகிடு என உயர்ந்தது.
இதனை அடுத்து பாதுகாப்பு கருதி செண்பகத்தோப்பு அணையில் இருந்து வினாடிக்கு 2,100 கன அடி தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது. இதனால் கரையோர உள்ள மக்கள் பாதுகாப்பாக இருக்க பொதுப்பணி மற்றும் வருவாய் துறை சார்பில் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.