இறை பற்றாளர்களும் விரும்பக்கூடிய அரசு இந்த திராவிட மாடல் அரசு என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளாா்.
சென்னை மயிலாப்பூரில் அறநிலையத்துறை சார்பில் நடைபெற்ற “கிராமக் கோயில் பூசாரிகள் மாநாடு” விழாவில் மு.க.ஸ்டாலின் பங்கேற்று உரையாற்றினார்.

இந்த நிகழ்ச்சியில் பேசுகையில், “இறை பற்றாளர்களும் விரும்பக்கூடிய அரசு இந்த அரசு” என அவர் தெரிவித்தார். கிராமக் கோயில் பூசாரிகள் சமூகத்தின் ஒரு முக்கிய அங்கம் என்றும், அவர்களின் வாழ்விலும் முன்னேற்றம் ஏற்படுத்துவது அரசின் கடமை என்றும் குறிப்பிட்டார்.
முன்னதாகவே கிராமக் கோயில் பூசாரிகளுக்கு மாதாந்திர ஊக்கத் தொகை உள்ளிட்ட பல நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டு வருவதாகவும் அவர் நினைவூட்டினார். “எல்லோருக்கும் எல்லாம்” என்பது வெறும் வார்த்தையல்ல; அதற்கான நடைமுறை எடுத்துக்காட்டே இந்த நடவடிக்கைகள் என அவர் கூறினார். திராவிட மாடல் ஆட்சி என்பது சமத்துவத்தையும், சமூக நீதி நோக்கத்தையும் அடிப்படையாகக் கொண்டது என்றும் விளக்கினார்.
அனைத்து ஜாதியினரும் அர்ச்சகராகலாம் என்ற மாற்றமே சமூக மாற்றத்தின் அடையாளம் என்றும் அவர் வலியுறுத்தினார். இந்த மாநாடு சிலருக்கு எரிச்சலை ஏற்படுத்தக்கூடும் என குறிப்பிட்ட அவர், கடந்த ஆட்சிக் காலத்தில் அறநிலையத்துறை அமைச்சர் யார் என்பது கூட பொதுமக்களுக்கு தெரியாத நிலை இருந்ததாக விமர்சித்தார்.
மேலும், கிராமக் கோயில் பூசாரிகளுக்கான பல புதிய அறிவிப்புகளையும் முதலமைச்சர் வெளியிட்டுள்ளாா். ஒவ்வொரு ஆண்டும் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு பூசாரிகளுக்கு புத்தாடை வழங்கப்படும் என்றார். ஈமச்சடங்குக்கான நிதி உதவி ரூ.5,000 இலிருந்து ரூ.10,000 ஆக உயர்த்தப்படும் என்றும் அறிவித்தார்.
பூசாரிகள் உயிரிழந்தால், அவர்களின் வாரிசுகளுக்கு வழங்கப்படும் உதவித் தொகை ரூ.50,000 இலிருந்து ரூ.1,00,000 ஆக அதிகரிக்கப்படும் என்றும் தெரிவித்தார். ஆண்டுதோறும் 500 பூசாரிகளுக்கு பயிற்சி வழங்கப்படும் என்றும், பூசாரிகள் மற்றும் அவர்களின் மகன், மகள்களுக்கு வழங்கப்படும் திருமண உதவித் தொகை ரூ.1,000 உயர்த்தி வழங்கப்படும் என்றும் கூறினார்.
இவ்வாறு, கிராமக் கோயில் பூசாரிகளின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்த பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுவதாகவும், சமூகத்தின் அனைத்து தரப்பினருக்கும் சமமான வாய்ப்புகளை வழங்குவதே திராவிட மாடல் ஆட்சியின் நோக்கம் என்றும் முதலமைச்சர் தனது உரையில் வலியுறுத்தியுள்ளாா்.


