வீட்டிற்கு வெளியே விளையாடி கொண்டிருந்த 3 வயது குழந்தை கீழே விழுந்து பலி
ஆண்டிபட்டி அருகே திறந்தவெளியில் அமைக்கப்பட்ட குடிநீர்பைப்பை தாண்ட முயன்றபோது தடுக்கி கீழே தவறிவிழுந்த 3 வயது குழந்தை உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
தேனிமாவட்டம் ஆண்டிபட்டி அருகே உள்ள கீழமஞ்சிநாயக்கன்பட்டி கிராமத்தை சேர்ந்த கணேசன் என்பவரது மகள் தயா ஸ்ரீ. இக்குழந்தையின் தந்தை கணேசன் கிராமத்தில் கூலிவேலைக்கு சென்றுவிட்டார். இவரது தாய் ஆண்டிபட்டியில் உள்ள மளிகைகடைக்கு வேலைக்கு சென்றுவிட்டார். வீட்டில் உள்ள குழந்தையின் பாட்டியும் கணேசனின் தாயாருமான மூதாட்டி பூ விற்பதற்காக வெளியில் சென்றுவிட்டார்.
இந்நிலையில் வீட்டிற்கு வெளியே வடக்குத் தெருவில் மற்ற குழந்தைகளுடன் விளையாடிக் கொண்டிருந்த மூன்று வயது குழந்தை தயாஸ்ரீ ஓடி விளையாடியபோது தெருவோரத்தில் அமைக்கப்பட்டிருந்த குடிநீர் வழங்கும் இரும்புகுழாயை தாண்ட முயன்றுள்ளது. அப்போது தடுக்கி கீழே தவறிவிழுந்ததது . இதில் குழந்தையின் நெற்றிப்பொட்டில் கம்பிதாக்கி காயமடைந்ததை அடுத்து தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தது.
இச்சம்பவம் குறித்து ராசதானி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.