ஓபிஎஸ் தரப்பு எத்தனை மேல்முறையீடு செய்தாலும் எங்களுக்கே வெற்றி- காமராஜ்
ஓபிஎஸ் தரப்பு எத்தனை மேல் முறையீடுகள் செய்தாலும் அதில் எல்லா காலங்களிலும் நாங்கள் வெற்றி பெறுவோம் என முன்னாள் உணவுத்துறை அமைச்சர் ஆர்.காமராஜ் தெரிவித்துள்ளார்.
கடந்த ஆண்டு ஜூலை 11ஆம் தேதி நடந்த அதிமுக பொதுக்குழுவில் எடப்பாடி பழனிச்சாமி இடைக்கால பொதுச் செயலாளர் தேர்வு செய்யப்பட்டார் . எடப்பாடி பழனிச்சாமி தேர்வை எதிர்த்து ஓ. பன்னீர்செல்வம் தரப்பு நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளது. அதிமுக பொதுக்குழு தீர்மானங்கள் செல்லும் என்று சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது. தொடர்ந்து தமிழகம் முழுவதும் எடப்பாடி பழனிச்சாமி ஆதரவாளர்கள் பட்டாசு வெடித்து இனிப்புகள் வழங்கி கொண்டாடி வருகின்றனர். அதன் ஒரு பகுதியாக திருவாரூர் மாவட்டம் மன்னார்குடியில் அதிமுக சார்பில் முன்னாள் உணவுத்துறை அமைச்சர் காமராஜ் தலைமையில் கட்சி தொண்டர்களுடன் பொதுக்குழு தீர்ப்பை வரவேற்று வெடி வெடித்து கொண்டாடினர்.

பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த காமராஜ, “மாபெரும் மக்கள் இயக்கத்திற்கு எதிர்காலம் மிக சிறப்பாக அமைய வேண்டும் என்பது ஒன்றரை கோடி அதிமுக தொண்டர்கள், நிர்வாகிகள் விருப்பம், அந்த விருப்பம் தீர்ப்பாக வந்துள்ளது. அதிமுக நூறாண்டு காலம் வாழும் வளரும் என்பதற்கு இது ஒரு அட்சரமாக விளங்குகிறது. அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி தேர்வாகியுள்ளார். அதிமுக திருவாரூர் மாவட்ட கழகத்தின் சார்பில் எடப்பாடி பழனிச்சாமி அவர்களுக்கு தொண்டர்களின் சார்பில் வாழ்த்துக்களை மகிழ்ச்சியையும் தெரிவித்துக் கொள்கிறோம். எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் அதிமுக மீண்டும் ஆட்சி அமைக்கும் என்பது உறுதி. ஓ பன்னீர்செல்வம் தரப்பிற்கு அதிமுகவில் குழப்பத்தை ஏற்படுத்த வேண்டும் என்பதைத் தவிர வேறு எண்ணம் கிடையாது. அவர்களிடம் தொண்டர்கள் கிடையாது, நிர்வாகிகள் கிடையாது. எத்தனை மேல் முறையீடுகள் செய்தாலும் எது முறையோ, எது சரியோ அதற்கு தான் தீர்ப்பு நிச்சயம் கிடைக்கும் . அதில் எல்லா காலங்களிலும் நாங்கள் வெற்றி பெறுவோம்” என தெரிவித்தார்.