அதிமுகவின் நிலைப்பாடு பணம் மற்றும் பதவி மட்டுமே- டிடிவி தினகரன்
அதிமுகவின் நிலைப்பாடு பணம் மற்றும் பதவி மட்டுமே என அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் விமர்சித்துள்ளார்.

சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய டிடிவி தினகரன், “தமிழ்நாடு அரசு சமீபத்தில் 3 பெண்களை அர்ச்சகர்களாக நியமித்தது வரவேற்கத்தக்கது. அதிமுகவின் நிலைப்பாடு பணம் மற்றும் பதவி மட்டுமே. அதிமுகவின் நிலைப்பாடு என்பது பணமும், பதவியும் தான். சனாதனம், சமூக நீதி பற்றி அவர்களுக்கு தெரியாது. அதிமுகவின் தற்போதைய பலம் இரட்டை இலை, அதை மக்கள் மன்றம் மூலம் மீட்போம். கோடநாடு வழக்கில் உண்மை குற்றவாளிகள் தண்டிக்கப்பட வேண்டும்.

எடப்பாடி பழனிச்சாமி இருக்கும் கூட்டணியில் நாம் இருக்க வேண்டுமா என அம்மா மக்கள் முன்னேற்றக் கழக நிர்வாகிகள், தொண்டர்கள் யோசிக்கின்றார்கள். அவர்களின் கருத்துக்கு மதிப்பளித்து விரைவில் முடிவு செய்வோம். நாங்கள் ஏற்கனவே தனியாக தேர்தலை சந்தித்தவர்கள். இப்போதும் சந்திக்க தயக்கம் இல்லை. நாடாளுமன்ற தேர்தல் கூட்டணி தொடர்பாக டிசம்பரில் இறுதி முடிவு செய்வோம். தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்ற முடியாத தங்களின் தோல்வியை மறைக்கவே தனது மகனை விட்டு சனாதன தர்மத்தை பற்றி பேச செய்து மடைமாற்ற பார்க்கிறார் ஸ்டாலின். வழக்கத்தில் இல்லாத விசயங்களை இப்போது பேசுவதால் என்ன பயன்?” எனக் கேள்வி எழுப்பியுள்ளார்.


