அண்ணா பல்கலைக்கழக தேர்வுக்கட்டணம் உயர்வு நிறுத்தி வைக்கப்படுவதாக உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி அறிவித்துள்ளார்.
அண்ணா பல்கலை.யின் கீழ் இயங்கும் பொறியியல் கல்லூரிகளில் செமஸ்டர் தேர்வுக்கட்டணம் 50% வரை உயர்த்தப்படுவதாக இன்று காலை அறிவிப்பு வெளியானது. தன்னாட்சி கல்லூரிகளில் பட்டப்படிப்பு சான்றிதழ், ஒருங்கிணைந்த மதிப்பெண் பட்டியல் கட்டணமும் ₹1000ல் இருந்து ₹1,500 ஆக உயர்த்தப்பட்டு உள்ளதாகவும், தன்னாட்சி பெறாத கல்லூரிகளில் செமஸ்டர் தேர்வுக் கட்டணம், இளநிலை பட்டங்களுக்கு ₹150லிருந்து ₹225 ஆக உயர்த்தப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டது. இதேபோல் முதுநிலை பட்டங்களுக்கு ₹450லிருந்து ₹670 ஆக உயர்ந்துள்ளதாகவும், இந்த புதிய கட்டணம் வரும் நவம்பர் – டிசம்பர் செமஸ்டர் தேர்வில் நடைமுறைக்கு வரும் என தெரிவிக்கப்பட்டிருந்தது. இது பொறியியல் மாணவர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருந்தது.
இந்நிலையில், தேர்வுக்கட்டணம் உயர்வு தொடர்பாக சென்னை கிண்டியில் உள்ள அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் செய்தியாளர்களை சந்தித்த உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி, பொறியியல் படிப்புகளுக்கான செமஸ்டர் தேர்வுகளுக்கான தேர்வு கட்டணம் உயர்த்தப்பட்டதாக முந்தைய ஆண்டு சிண்டிகேட் அவையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தை முன்னதாகவே அறிவித்திருந்ததாகவும், ஓராண்டு காலம் முடிவடைந்த நிலையில் தற்போது கட்டணம் உயர்வு கொண்டுவரப்பட்டு உள்ளதாகவும் தெரிவித்தார்.
மேலும் தேர்வு கட்டணத்தை உயர்த்துவது மாணவர்களை பாதிக்கும் என்பதை கருத்தில் கொண்டு தற்போது கட்டண உயர்வு நிறுத்தி வைக்கப்படுவதாக அமைச்சர் பொன்முடி கூறினார். அண்ணா பல்கலை.க்கு உட்பட்ட அனைத்து பொறியியல் கல்லூரிகளிலும் தற்போதைய கட்டண முறையே நடைமுறையில் இருக்கும் என்றும், தேர்வுக்கட்டண நிர்ணயம் தொடர்பாக பல்கலைக்கழக சிண்டிகேட் கூடி முடிவெடுக்கும் என்றும் அமைச்சர் பொன்முடி கூறினார்.