தலைமைச் செயலக அதிகாரிகள் மற்றும் பணியாளர்கள் இனி பயோமெட்ரிக் அல்லது முக அங்கீகார (Face ID) முறையின் மூலம் தங்களது வருகையை கட்டாயமாக பதிவு செய்ய வேண்டும் என்ற புதிய நடைமுறை அமலுக்கு வர உள்ளது.
தமிழக தலைமைச் செயலக வரலாற்றில் முதல்முறையாக, அதிகாரிகள் மற்றும் பணியாளர்களின் வருகைப்பதிவை கண்காணிக்கும் வகையில் பயோமெட்ரிக் அல்லது முக அங்கீகார (Face ID) அடிப்படையிலான வருகைப்பதிவு முறை ஜூன் 1 முதல் கட்டாயமாக அமல்படுத்தப்பட உள்ளது. மனிதவள மேலாண்மைத் துறையில் முதற்கட்டமாக இந்த நடைமுறை அறிமுகப்படுத்தப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. பின்னர், இதை படிப்படியாக தலைமைச் செயலகத்தின் பிற துறைகளுக்கும் விரிவுபடுத்த அரசு திட்டமிட்டுள்ளது.

துறை வெளியிட்டுள்ள சுற்றறிக்கையின்படி, அனைத்து அதிகாரிகள் மற்றும் பணியாளர்களும் அலுவலகத்திற்கு வருகை தரும் போது வழக்கம்போல் வருகைப் பதிவேட்டில் கையெழுத்திடுவதுடன், பயோமெட்ரிக் அல்லது முக அங்கீகார முறையிலும் தங்களது வருகையை பதிவு செய்ய வேண்டும். மேலும், அனைத்து பணியாளர்களும் காலை 10 மணிக்குள் அலுவலகத்தில் ஆஜராக வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
பணிநேரத்தில் அனைத்து ஊழியர்களும் கட்டாயமாக அடையாள அட்டையை அணிந்திருக்க வேண்டும் என்றும் உத்தரவிடப்பட்டுள்ளது. இந்த முறை ஏற்கனவே சோதனை அடிப்படையில் செயல்படுத்தப்பட்டிருந்தாலும், சில ஊழியர்களின் ஆட்சேபனைகள் மற்றும் தொழில்நுட்ப சிக்கல்கள் காரணமாக அதன் முழுமையான அமலாக்கம் தற்காலிகமாக ஒத்திவைக்கப்பட்டிருந்தது. தற்போது சோதனை கட்டம் நிறைவடைந்த நிலையில், முழுமையான நடைமுறையாக அமல்படுத்தப்பட உள்ளது.
இதற்கிடையில், தலைமைச் செயலகத்தின் பிற துறைகளிலும் வருகை மற்றும் பணிநேர ஒழுங்குமுறைகள் கடுமையாக்கப்பட்டுள்ளன. குறிப்பாக உணவு மற்றும் கூட்டுறவுத் துறையில், பணியாளர்கள் காலை 9.50 மணிக்குள்ளும், அலுவலக உதவியாளர்கள் காலை 9.30 மணிக்குள்ளும் பணிக்கு வர வேண்டும் என்று சமீபத்தில் உத்தரவிடப்பட்டுள்ளது. இருப்பினும், அந்தத் துறைகளில் பயோமெட்ரிக் அல்லது முக அங்கீகார வருகைப்பதிவு முறை இன்னும் கட்டாயமாக்கப்படவில்லை. நிர்வாகத் திறன், வெளிப்படைத்தன்மை மற்றும் நேர்த்தியான பணிச்சூழலை உறுதி செய்யும் நோக்கில் இந்த புதிய நடைமுறை அறிமுகப்படுத்தப்படுவதாக அரசு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
