சொத்துக்குவிப்பு வழக்கு- ஓபிஎஸ் பதிலளிக்க ஐகோர்ட் உத்தரவு
சொத்துக்குவிப்பு வழக்கில் முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் உள்ளிட்டோர் விடுவிப்பை எதிர்த்து தாமாக முன் வந்து விசாரணை நடத்திய சென்னை உயர்நீதிமன்றம், இதுதொடர்பாக லஞ்ச ஒழிப்புத்துறை மற்றும் ஓபிஎஸ் உள்ளிட்டோர் பதிலளிக்க உத்தரவிட்டது.
இன்றைய நீதிமன்ற விசாரணையில், “எதிர்க்கட்சி அளிக்கும் புகாரை DVAC வழக்காக பதிந்து, ஆட்சி மாறியதும் அந்த வழக்கு முடித்து வைக்கப்படுகிறது. இதே pattern பல வழக்குகளில் தொடர்கிறது. ஓ.பி.எஸ் வழக்கு நான் பார்த்த வழக்குகளிலேயே மிக மோசமான வழக்கு. 374% அதிகம் சொத்து சேர்த்துள்ளார் என்று இறுதி அறிக்கை சொல்கிறது. 2012ல் அதிமுக ஆட்சிக்கு வந்ததும், கூடுதல் விசாரணை நடக்கிறது. நீதிபதியும் அதற்கு ஒப்புக்கொள்கிறார். அதற்கு காரணமும் தெரிவிக்கவில்லை. உயர்நீதிமன்றம் வழக்கிற்கு தொடர்பில்லாத நீதிமன்றத்திற்கு இந்த வழக்கை மாற்றுகிறது.
அதன் பிறகு இறுதி அறிக்கை அரசிடம் அளிக்கப்பட்டு, சபாநாயகர் முன்பு அளிக்கப்படுகிறது. அதை ஏற்று, வழக்கு தொடர கொடுத்த அனுமதியை சபாநாயகர் திரும்பப் பெற்றார். உச்சநீதிமன்றம் அதை ரத்து செய்தது. அதையடுத்து சபாநாயகர் முன்பு அளித்த இறுதி அறிக்கையை நீதிமன்றத்தில் அளிக்காமல், வேறு ஒரு அறிக்கையை அளித்துள்ளார்கள். இந்த வழக்கில் சட்டப்படி எதுவும் நடக்கவில்லை. இறுதி அறிக்கையை செல்லத்தகாத ஒன்று என்று அரசு வழக்கறிஞர் சொல்ல, அதற்கு நீதிமன்றம் பாராட்டும் தெரிவித்துள்ளது. நீதிமன்றங்கள் சட்டத்தை காக்க நடப்பது போல தெரியவில்லை. DVAC யார் ஆட்சியில் இருக்கிறார்கள் என்பதை பொறுத்து செயல்படுகிறது. அதுவரை வழக்கை நிழுவையில் வைத்துக் கொள்கிறது. ஆட்சி மாறியதும், கூடுதல் விசாரணை நடத்துகிறோம் என்று சொல்கிறது.
இந்த வழக்கில் இருந்து தான், அந்த pattern தொடங்கியுள்ளது. DVAC நேர்மையாக செயல்படுவது இல்லை. இதை உயர்நீதிமன்றம் கண்ணை மூடிக் கொண்டு பார்க்காது. இதில் குற்றம்சாட்டப்பட்ட நபரின் கருத்தையும் கேட்டிருக்க வேண்டும் என்று நீதிபதி தீர்ப்பில் கூறியிருக்கிறார். இது என்ன வகையான தீர்ப்பு என புரியவில்லை. இந்த வழக்கில் அரசு தரப்புக்கும், ஓ.பன்னீர்செல்வம் மற்றும் அவரது குடும்பத்திற்கும் நோட்டீஸ் அனுப்ப உத்தரவிடுகிறேன். இந்த வழக்கை 27.9.2023ல் பட்டியலிட வேண்டும்” என்று நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் தெரிவித்தார்.