அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் மீது வழக்குப்பதிவு
சனாதனம் குறித்து கருத்து தெரிவித்த அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
சென்னை காமராஜர் அரங்கில் நடைபெற்ற சனாதன ஒழிப்பு மாநாட்டில் உரையாற்றிய அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், “மத்திய அரசு அறிவித்துள்ள விஸ்வகர்மா திட்டத்தை திமுக கடுமையாக எதிர்க்கும். கொசு, டெங்கு, மலேரியா போன்றவற்றை எதிர்க்கக்கூடாது. ஒழிக்க வேண்டும், அதேபோல்தான் சனாதனமும். கம்யூனிச இயக்கமும், திராவிட இயக்கமுதான் சமூகத்தில் மாற்றத்தை கொண்டு வந்தது. சாதியாக மக்களை பிரித்தது சனாதனம். சமத்துவப்புரம் தந்து மக்களை ஒன்றிணைத்தவர் கலைஞர். மாபெரும் மாற்றத்தை உருவாக்க இருக்கும் முதலமைச்சரின் காலை உணவுத் திட்டத்தை கொச்சைப்படுத்தி எழுதிய செய்தித் தாளை நேரடியாக கண்டிக்கும் புரிதலும், துணிவும் மாணவர்களுக்கு ஏற்பட்டுள்ளது” என்றார்.
இந்த விவகாரம் பூதாகரமாகியுள்ள நிலையில், சனாதனம் குறித்த அமைச்சர் உதயநிதி ஸ்டாலினின் கருத்துக்கள், இந்து மதத்தினரின் உணர்வுகளை புண்படுத்தியதாக உத்தரப்பிரதேச மாநிலம் ராம்பூர் காவல் நிலையத்தில் வழக்கறிஞர்கள் அளித்த புகாரின் பேரில் போலீசார் நடவடிக்கை எடுத்துள்ளனர். இரு வழக்கறிஞர்கள் அளித்த புகார் அடிப்படையில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் மீது இரண்டுக்கும் அதிகமான பிரிவுகளின் கீழ் எப்.ஐ.ஆர்.பதிவு செய்யப்பட்டுள்ளது. அதன்படி, சனாதனம் குறித்து கருத்து தெரிவித்த கர்நாடக அமைச்சர் பிரியங்க் கார்கே மீதும் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.