காவிரி விவகாரம் – “தனித்து முடிவெடுப்பதைத் தவிர்த்து அனுபவமிக்கத் தலைவர்களிடம் ஆலோசியுங்கள்” – முதலமைச்சர் விஜய்க்கு மூத்த பத்திரிகையாளர் அறிவுரை!
தமிழகத்தில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ள காவிரி மேலாண்மை மற்றும் நீர் உரிமை விவகாரத்தில், தமிழக அரசு பின்பற்றி வரும் மௌனமும் வெளிப்படைத்தன்மையற்ற போக்கும் கடும் விமர்சனங்களுக்கு உள்ளாகியுள்ளன. கர்நாடக துணை முதலமைச்சர் டி.கே.சிவகுமாரின் அழைப்பை ஏற்று, முதலமைச்சர் விஜய் பெங்களூர் பயணம் மேற்கொண்டு பேச்சுவார்த்தை நடத்தவிருப்பதாகத் தகவல்கள் கசிந்துவரும் நிலையில், இதுகுறித்து அரசு தரப்பில் இருந்து இதுவரை அதிகாரப்பூர்வமான எந்தவொரு செய்திக்குறிப்பும் வெளியிடப்படவில்லை.

இதுகுறித்து மூத்த பத்திரிகையாளரும் அரசியல் திறனாய்வாளருமான எஸ்பிஎல் லட்சுமணன் கூறியிருப்பதாவது,
அரசாணைகளில் தொடரும் மர்மம்
ஆட்சியின் தொடக்கத்தில் முதலமைச்சர் விஜய் “அரசு வெளிப்படைத்தன்மையோடு இயங்கும், பவர் சென்டர் என்பது ஒன்றுதான்” என்று அறிவித்ததை நினைவு கூர்ந்த லட்சுமணன், ஆனால் தற்போது நடைமுறையில் அதற்கு நேர்மாறான சூழலே நிலவுவதாகக் குற்றம் சாட்டினார். அரசு நியமனங்கள் மற்றும் ஆலோசகர்கள் நியமனம் தொடர்பான அரசாணைகள் கூட பொதுவெளியில் வெளிப்படையாக வெளியிடப்படாமல் மூடுமந்திரமாக வைக்கப்படுவது ஏன் என்ற கேள்வியை அவர் எழுப்பியுள்ளார். அரசாணை என்பது வெளிப்படையான பொது ஆவணம் என்றிருக்க, தகவல்கள் அனைத்தும் பின்வாசல் வழியாகக் கசிவது அரசாங்கத்தின் மீதான நம்பகத்தன்மையைக் கேள்விக்குள்ளாக்குகிறது என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.
காவிரி விவகாரமும் பெங்களூர் பயணப் புதிரும்
காவிரி விவகாரத்தில் கர்நாடக அரசுடன் பேச்சுவார்த்தை நடத்தச் செல்வதாகக் கூறப்படும் சூழலில், அரசுத் தரப்பிலிருந்து எந்தத் தகவலும் அதிகாரப்பூர்வமாக வெளிவரவில்லை. அமைச்சர்கள் ஒருபுறம் முரணான கருத்துகளைத் தெரிவிக்க, மறுபுறம் எதிர்க்கட்சிகளும் தோழமைக் கட்சிகளும் என்ன செய்வது என்று தெரியாமல் குழப்பத்தில் ஆழ்ந்துள்ளன.கடந்த காலத்தில் முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா உச்ச நீதிமன்றத்தின் அறிவுறுத்தலின்படி பேச்சுவார்த்தைக்குச் சென்றபோதும், கர்நாடக அரசு அணைய மூடி ஏமாற்றிய வரலாற்று உண்மைகளைச் சுட்டிக்காட்டிய லட்சுமணன், இந்த விவகாரத்தில் அரசு கூடுதல் எச்சரிக்கையுடன் செயல்பட வேண்டும் என வலியுறுத்தினார்.
கூட்டணிக் கட்சிகளின் மௌனம்
மாநிலத்தின் வாழ்வாதாரப் பிரச்சினையான காவிரி விவகாரத்தில், ஆளுங்கட்சியின் கூட்டணிக் கட்சிகளான இடதுசாரிகள், விடுதலை சிறுத்தைகள் கட்சி (விசிக), மதிமுக மற்றும் முஸ்லிம் லீக் போன்ற இயக்கங்கள் தங்களது நிலைப்பாட்டை வெளிப்படையாகத் தெரிவிக்க வேண்டும் என அவர் கோரிக்கை விடுத்துள்ளார். “சுயமரியாதை என்பது திராவிட இயக்கங்களுக்கு மட்டும் சொந்தமானதல்ல; தமிழன் ஒவ்வொருவருக்கும் உரியது” எனக் குறிப்பிட்ட அவர், இந்த விவகாரத்தில் தோழமைக் கட்சிகள் காட்டும் அமைதி விந்தையானது என்றும் சாடினார்.
மூத்த தலைவர்களிடம் ஆலோசனை தேவை
அரசியல் களத்தில் புதிய மாற்றங்களை உருவாக்கும் நோக்கில் செயலாற்றும் முதலமைச்சர் விஜய், தன்னிச்சையாக முடிவுகளை எடுப்பதை விடுத்து, அனைத்துக் கட்சித் தலைவர்களையும், முன்னாள் முதலமைச்சர்களையும், வைகோ போன்ற வாழ்நாள் முழுவதும் தமிழக உரிமைக்காகக் குரல் கொடுத்துவரும் அனுபவமிக்க ஆளுமைகளையும் அழைத்து ஆலோசிக்க வேண்டும் என லட்சுமணன் அறிவுறுத்தினார். “துரைமுருகன் போன்ற மூத்த தலைவர்களிடம் சென்று ஆலோசனை கேட்பதால் எந்தக் குறையும் ஏற்பட்டுவிடப் போவதில்லை; மாறாக மக்கள் மனங்களில் முதலமைச்சரின் உயரம் மேலும் அதிகரிக்கும்” என்றும் அவர் குறிப்பிட்டார்.
சர்வாதிகாரப் போக்கு ஆபத்தானது
“எதிர்க்கட்சிகள் மட்டும்தான் அமைதியாக இருக்க வேண்டும், நாங்கள் என்ன வேண்டுமானாலும் பேசுவோம், எதையும் வெளிப்படையாகச் சொல்ல மாட்டோம் என்ற போக்கு சர்வாதிகாரத்தின் அறிகுறி” என எச்சரித்த எஸ்பிஎல் லட்சுமணன், முதலமைச்சருக்குத் தவறான ஆலோசனைகளை வழங்கும் நபர்களை உடனடியாக விட்டுத் தள்ள வேண்டும் எனக் கேட்டுக்கொண்டுள்ளார். கள்ள மௌனத்தைக் கலைத்துவிட்டு, தமிழக மக்களின் நீதிக்காக அரசு வெளிப்படையாகப் பேச முன்வர வேண்டும் என்பதே அவரது முதன்மையான கோரிக்கையாகும்.
“கடந்த ஆட்சியின் அறநிலையத்துறை ஊழல்: விரைவில் வெள்ளை அறிக்கை!” — திருச்சியில் அமைச்சர் ரமேஷ் பேட்டி!
