தீபாவளி பண்டிகையை முன்னிட்டு சொந்த ஊர்களுக்குச் செல்ல திட்டமிட்டுள்ள ரயில் பயணிகளுக்கு அதிர்ச்சி அளிக்கும் வகையில், முக்கிய வழித்தடங்களுக்கான ரயில் டிக்கெட்டுகள் முன்பதிவு தொடங்கிய சில நிமிடங்களிலேயே விற்றுத் தீர்ந்துள்ளன.


இந்த ஆண்டு தீபாவளி பண்டிகை நவம்பர் 8-ஆம் தேதி கொண்டாடப்படுகிறது. இதையொட்டி, 60 நாட்களுக்கு முன்பாக ரயில் டிக்கெட் முன்பதிவு செய்யும் நடைமுறையின் அடிப்படையில், பயண தேதிக்கு ஏற்ப செப்டம்பர் 6 முதல் முன்பதிவு தொடங்கியுள்ளது.
இன்று காலை 8 மணிக்கு தொடங்கிய முன்பதிவு
நவம்பர் 7-ஆம் தேதி, அதாவது தீபாவளிக்கு ஒரு நாள் முன்னதாக பயணம் செய்ய விரும்புபவர்களுக்கான டிக்கெட் முன்பதிவு இன்று காலை 8 மணிக்கு தொடங்கியது. முன்பதிவு தொடங்கியவுடன் ஏராளமானோர் ஒரே நேரத்தில் டிக்கெட் பதிவு செய்ய முயன்றதால் கடும் போட்டி ஏற்பட்டது.
பல முக்கிய ரயில்களில் முன்பதிவு தொடங்கிய சில நிமிடங்களிலேயே Confirmed Tickets கிடைக்காமல், Waiting List நிலைக்கு சென்றதாக பயணிகள் தெரிவித்துள்ளனர். சில நேரங்களில் IRCTC தளத்திலும் அதிகப்படியான பயணிகள் ஒரே நேரத்தில் அணுகியதால் தொழில்நுட்ப சிரமங்கள் ஏற்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
அடுத்தடுத்த நாட்களுக்கான முன்பதிவு எப்போது?
நவம்பர் 8-ஆம் தேதி பயணத்திற்கான ரயில் டிக்கெட் முன்பதிவு செப்டம்பர் 9-ஆம் தேதி காலை 8 மணிக்கு தொடங்குகிறது.
நவம்பர் 9-ஆம் தேதி பயணிக்க விரும்புபவர்கள் செப்டம்பர் 10-ஆம் தேதியும், நவம்பர் 10-ஆம் தேதி பயணத்திற்கான முன்பதிவு செப்டம்பர் 11-ஆம் தேதியும் தொடங்கும்.
எனவே, தீபாவளி பயணத்தைத் திட்டமிட்டுள்ளவர்கள் தங்களுக்கான முன்பதிவு தேதியை முன்கூட்டியே தெரிந்து கொண்டு, காலை 8 மணிக்கு முன்பாகவே IRCTC தளத்தில் Login செய்து தயாராக இருப்பது பயனுள்ளதாக இருக்கும்.
சிறப்பு ரயில்கள் இயக்கப்படுமா?
தீபாவளி காலத்தில் அதிகரிக்கும் பயணிகள் கூட்டத்தை சமாளிக்க இந்திய ரயில்வே பல்வேறு வழித்தடங்களில் சிறப்பு ரயில்களை இயக்க திட்டமிட்டுள்ளது. இதனால் வழக்கமான ரயில்களில் டிக்கெட் கிடைக்காதவர்கள், சிறப்பு ரயில்களின் அறிவிப்புகளையும் தொடர்ந்து கவனிக்கலாம்.
தீபாவளிக்கு இன்னும் இரண்டு மாதங்கள் உள்ள நிலையில், தற்போதே ரயில் டிக்கெட்டுகளுக்கான தேவை அதிகரித்திருப்பது, இந்த ஆண்டு பண்டிகை கால ரயில் பயணம் எந்த அளவுக்கு பரபரப்பாக இருக்கும் என்பதை காட்டுகிறது.
