வேளாண் பட்ஜெட்டால் விவசாயிகளுக்கு பலனில்லை என்று தமிழ்நாடு சட்டப்பேரவையின் எதிர்க்கட்சித் தலைவரும், அ.தி.மு.க. பொதுச்செயலாளருமான எடப்பாடி பழனிசாமி விமர்சித்துள்ளார்.
சட்டப்பேரவை வளாகத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த எடப்பாடி பழனிசாமி, “வேளாண் பட்ஜெட்டால் விவசாயிகளுக்கு பலனில்லை. டெல்டா மாவட்ட குறுவைச் சாகுபடி விவசாயிகளுக்கு இழப்பீடு வழங்கப்படவில்லை. சம்பா, தாளடி பயிர் செய்த விவசாயிகள் தண்ணீரில்லாமல் தவித்து வருகின்றனர். இந்தாண்டு தாக்கல் செய்த பட்ஜெட்டில் மக்களுக்கு பல ஏமாற்றங்கள் உள்ளன.
வார்த்தை ஜாலங்களால் மக்களின் கவனத்தை திசைத் திருப்பி ஏமாற்றும் அரசின் பட்ஜெட் கானல் நீர் போன்றது. எந்த நீண்டகால வளர்ச்சித் திட்டங்களோ, நிதிநிலையை சீராக்கும் முயற்சிகளோ தென்படவில்லை. குறுவை சாகுபடி செய்து பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு ஏக்கருக்கு ரூபாய் 35,000 வழங்க வேண்டும்.
பயிர் காப்பீடு திட்டத்தில் விவசாயிகளுக்கு உரிய இழப்பீடு வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். தென்னை விவசாயிகளுக்கு எந்த அறிவிப்பும் இல்லை. மேட்டூர் அணையில் காலம் தாழ்த்தி தண்ணீர் திறந்துவிடப்பட்டதால் விவசாயிகள் பாதிக்கப்பட்டுள்ளனர்” என்று குற்றம் சாட்டியுள்ளார்.