தூத்துக்குடியில் திருமணம் ஆன 8 மாதங்களில் நான்கு மாத கருவை கலைக்க சொல்லி கணவன் மற்றும் மாமியார் அடித்து கொடுமைப்படுத்தியதால் மனமுடைந்த நான்கு மாத கர்ப்பிணி பெண் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.தூத்துக்குடி கே வி கே நகர் பகுதியை சேர்ந்தவர் சேர்ம துரை இவருக்கு மூன்று பெண் குழந்தைகள் ,நான்கு ஆண் குழந்தைகள் இவரது கடைசி மகளான முத்தாரம்மனுக்கும் அமுதா நகர் ,இரண்டாவது தெரு பகுதியைச் சேர்ந்த கிருஷ்ண பெருமாள் என்பவருக்கும் கடந்த மார்ச் மாதம் 24 ஆம் தேதி திருமணம் நடைபெற்றது.கிருஷ்ண பெருமாள் கட்டிட தொழிலாளியாக பணிபுரிந்து வந்துள்ளார்.
இதைத்தொடர்ந்து கிருஷ்ண பெருமாள் முத்தாரம்மன் தம்பதி மற்றும் கிருஷ்ண பெருமாளின் தாயார் லட்சுமி ஆகியோர் அமுதா நகர் 2வது தெருவில் உள்ள வீட்டில் வசித்து வந்துள்ளனர் . திருமணம் ஆனதிலிருந்து மாமியார் லட்சுமி மற்றும் கணவன் கிருஷ்ண பெருமாள் ஆகியோர் முத்தாரம்மனை அடித்து மற்றும் எதுவும் வாங்கிக் கொடுக்காமல் அடிமை போல வீட்டில் வைத்து கொடுமைப்படுத்தியதாக கூறப்படுகிறது. இது தொடர்பாக ஏற்கனவே மாமியார் மற்றும் கணவர் மீது தூத்துக்குடி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் முத்தாரம்மன் புகார் அளித்துள்ளாா். சமாதானத்திற்கு பின்னர் சேர்ந்து வாழ்ந்து வந்துள்ளனா்.

இந்நிலையில் முத்தாரம்மன் நான்கு மாதம் கர்ப்பம் ஆகி உள்ளார். இதைத் தொடர்ந்து கர்ப்பிணிப் பெண் என்று பாராமல் அவருக்கு தேவையான சத்தான பொருட்களை வாங்கித் தராமல் மாமியார் லட்சுமி மற்றும் கணவர் கிருஷ்ணா பெருமாள் கொடுமைப்படுத்தியுள்ளனர். மேலும் கர்ப்பத்தை கலைக்க சொல்லி அடிக்கடி மாமியார் லட்சுமி மற்றும் கணவன் கிருஷ்ண பெருமாள் அடித்து துன்புறுத்தி உள்ளனர்.
இதேபோன்று நேற்று காலையும் மாமியார் லட்சுமி மற்றும் கணவர் கிருஷ்ண பெருமாள் கருவை கலைக்க சொல்லியும் தகாத வார்த்தைகளால் முத்தாரம்மனை வசை பாடி அடித்து துன்புறுத்தி மேலும் அவரிடம் இருந்த செல்போனை பறித்து உடைத்துள்ளாகள். இதை அடுத்து முத்தாரம்மன் மற்றும் அவரது சகோதரிகள் தூத்துக்குடி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் மீண்டும் புகார் அளிக்க சென்றுள்ளனர் . ஆனால் காவல்துறையினர் அவரிடம் முறையாக விசாரணை செய்யாமல் திருப்பி அனுப்பியுள்ளனர்.
இதை அடுத்து மனம் உடைந்த நிலையில் வாழ்க்கையில் விரக்தி அடைந்து இருந்த முத்தாரம்மன் கே வி கே நகரில் உள்ள தனது தாய் வீட்டிற்கு முத்தாரம்மன் வந்துள்ளார். இந்நிலையில் கணவன் மற்றும் மாமியார் கொடுமைப்படுத்தியது காரணமாக மனம் உடைந்த முத்தாரம்மன் தனது வீட்டில் யாரும் இல்லாத நிலையில் தூக்கு போட்டு தற்கொலைக்கு முயன்றுள்ளாா். வீட்டில் இருந்தவர்கள் மற்றும் அருகே இருந்தவர்கள் முத்தாரம்மனை மீட்டு தூத்துக்குடி அரசு மருத்து கல்லூரி மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக சேர்த்தனர்.
இதில் சிகிச்சை பலனின்றி நாலு மாத கர்ப்பிணி பெண்ணான முத்தாரம்மன் பரிதாபமாக உயிரிழந்தார். இதைத்தொடர்ந்து முத்தாரம்மன் குடும்பத்தினர் தூத்துக்குடி மத்திய பாகம் காவல் நிலையத்தில் கணவர் கிருஷ்ண பெருமாள் மற்றும் மாமியார் லட்சுமி ஆகியோர் மீது புகார் அளித்தனர் இதை அடுத்து காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து இருவரையும் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்
மேலும் திருமணமான 8 மாதத்தில் மாமியார் மற்றும் கணவன் கொடுமை காரணமாக முத்தாரம்மன் உயிரிழந்ததை தொடர்ந்து தூத்துக்குடி சமூக பாதுகாப்பு தனி வட்டாட்சியர் இந்த சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்தி வருகிறார்.
தூத்துக்குடியில் கணவன் மற்றும் மாமியார் கருவை கலைக்கச் சொல்லி அடித்து கொடுமைபடுத்தியதன் காரணமாக நான்கு மாத கர்ப்பிணி மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தும் உரிய நடவடிக்கை எடுக்காததால் பெண் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.