கோவை குற்றாலம் சூழல் சுற்றுலா நுழைவு கட்டணத்தில் பல லட்சம் மோசடியில் ஈடுபட்ட வனவர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளது.


கோவை குற்றாலம் அருவிக்குச் செல்ல, சூழல் சுற்றுலா மேம்பாட்டிற்காக வனத்துறை சார்பில் நுழைவு கட்டணம் வசூல் செய்யப்பட்டு வருகிறது. இந்நிலையில் நுழைவு கட்டணம் செலுத்தி சீட்டுகளை வழங்க கொடுக்கப்பட்ட இயந்திரத்தை வைத்து பல லட்சம் ரூபாய் மோசடி செய்ததாக புகார் எழுந்தது.
இதையடுத்து மாவட்ட வனத்துறை அதிகாரிகள் மேற்கொண்ட தொடர் விசாரணையில் போளுவாம்பட்டி வனச்சரகத்தில் வனவராக பணியாற்றி வரும் ராஜேஷ்குமார் இந்த மோசடியை அரங்கேற்றியது தெரியவந்தது. மேலும் முன்னாள் போளுவாம்பட்டி சரக ரேஞ்சர் சரவணன் உதவியுடன் கடந்த 2021ல் இருந்து போலி சீட்டுகளை வழங்கி பல லட்சம் மோசடி செய்தது தெரியவந்தது. இதையடுத்து ராஜேஷ்குமாரை பணியிடை நீக்கம் செய்து மாவட்ட வன அலுவலர் அசோக்குமார் உத்தரவிட்டுள்ளார். மேலும் அவரிடமிருந்து ரூ.35 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
அதே போல 2021 ல் போளுவாம்பட்டி வனச்சரகராக இருந்த சரவணனிடம் விசாரணை மேற்கொள்ள உள்ளனர். இதனிடையே அவர் தற்போது மதுரை வன மண்டலத்திற்கு உட்பட்ட ரமேஸ்வரம் வனச்சரகராக பணியாற்றி வருகிறார். அவரையும் பணியிடை நீக்கம் செய்ய மாவட்ட வன அலுவலர் பரிந்துறை செய்துள்ளார். மேலும் அவரிடம் உள்ள ரூ.25 லட்சத்தையும் பறிமுதல் செய்யும் நடவடிக்கை நடந்து வருகிறது.
