உலக அளவிலான விளையாட்டு போட்டிகளில் பங்கேற்கும் தமிழக வீரர், வீராங்கனைகளுக்கு தமிழ்நாடு சாம்பியன்ஸ் அறக்கட்டளை சார்பில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் நிதியுதவி வழங்கினார்.
தமிழ்நாட்டு விளையாட்டு வீரர்கள் – வீராங்கனைகள், உலக அரங்கில் படைத்து வரும் சாதனைகளுக்குத் துணை நிற்கின்ற வகையில், விளையாட்டு மேம்பாட்டுத் துறையின் தமிழ்நாடு சாம்பியன்ஸ் அறக்கட்டளை மூலம் தொடர்ந்து நிதி உதவிகள் வழங்கப்பட்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக, உலக டேக்வாண்டோ ஜுனியர் சாம்பியன்ஷிப் போட்டியில் பங்கேற்க உள்ள வீராங்கனை ஆர்.ஜனனியின் பயணம் உள்ளிட்ட செலவினங்களுக்காக ரூ. 3 லட்சம், ஸ்பெயின் நாட்டில் நடைபெறுகிற உலக ஸ்ட்ராங்மேன் சாம்பியன்ஷிப் போட்டியில் பங்கேற்க உள்ள டி. கண்ணனுக்கு ரூ. 2 லட்சத்திற்கான காசோலைகளை அமைச்சர் உதயநிதி வழங்கினார்.
இதேபோல், World Dance Sport Federation-ன் உலக பிரேக்கிங் யூத் சாம்பியன்ஷிப் போட்டியில் களம் காணுகின்ற பிரேம் காந்தி மற்றும் ஆராதானா ஆகியோருக்கு செலவீனத் தொகையாக தலா ரூ. 1.50 லட்சம், என காசோலைகளை அமைச்சர் உதயநிதி வழங்கினார். மேலும், உஸ்பெகிஸ்தானில் அடுத்த மாதம் நடைபெறவுள்ள 8th Asian Pencak Silat Championship (APSC) போட்டிகளில் தமிழ்நாட்டிலிருந்து பஙகேற்கும் 7 வீரர்களின் பயணம் செலவினங்களுக்காக 10.50 லட்சத்துக்கான காசோலைகளை அமைச்சர் உதயநிதி வழங்கினார்.