எல்.ஐ.சி இணையதளம் பக்கம் முழுமையாக இந்தியில் மாற்றம் செய்யப்பட்டதற்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
பொதுத்துறை நிறுவனமான எல்.ஐ.சியின் இணைதள பக்கம் ஆங்கிலத்தில் செயல்பட்டு வந்த நிலையில், இன்று காலை முழுமையாக இந்தியில் மாற்றப்பட்டது. இதனால் இந்தி தெரியாத பயனர்கள் எல்ஐசி இணையதளத்தை பயன்படுத்த முடியாத நிலை ஏற்பட்டது. மத்திய அரசின் இந்த நடவடிக்கைக்கு எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.
இந்த நிலையில், எல்.ஐ.சி இணையதளம் இந்தியில் மாற்றம் செய்யப்பட்டதற்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டு உள்ள சமுக வலைதள பதிவில், எல்.ஐ.சி இணையதளம் இந்தி திணிப்புக்கான பிரச்சார கருவியாக குறைக்கப்பட்டுள்ளதாக விமர்சித்துள்ளார். எல்.ஐ.சி இணையதளத்தில் ஆங்கிலத்தைத் தேர்ந்தெடுக்கும் விருப்பம் கூட இந்தியில் காட்டப்படுவதாகவும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
மத்திய அரசின் இந்த நடவடிக்கை நாட்டின் பன்முகத்தன்மையை மிதித்து, பலவந்தமாக கலாச்சார மற்றும் மொழி திணிப்பு மேற்கொள்வதை தவிர வேறில்லை என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் குற்றம்சாட்டியுள்ளார். எல்.ஐ.சி அனைத்து இந்தியர்களின் ஆதரவுடன் வளர்ந்ததாக தெவித்துள்ள அவர், இந்த மொழியியல் கொடுங்கோன்மையை உடனடியாக திரும்பப்பெற வேண்டும் என்றும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.