கனமழை காரணமாக இன்று 18 மாவட்டங்களில் கல்வி நிறுவனங்களுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
தென்மேற்கு வங்கக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வுப்பகுதி, தற்போது தீவிர காற்றழுத்த தாழ்வுப்பகுதியாக நீடித்து வருகிறது. இது தொடர்ந்து மேற்கு, வடமேற்கு திசையில் நகர்ந்து இன்று (அக்.22) பிற்பகலில் தென்மேற்கு மற்றும் அதனையொட்டிய மத்திய மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் வட தமிழக, புதுச்சேரி மற்றும் தெற்கு ஆந்திர கடலோர பகுதிகளுக்கு அப்பால் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெறக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
பின்னர் மேலும் மேற்கு – வடமேற்கு திசை நோக்கி நகர்ந்து, நாளை (அக்.23) வட தமிழகம் , புதுச்சேரி, தெற்கு ஆந்திரா கடலோரப் பகுதிகளுக்கு வந்து தீவிர காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற வாய்ப்புள்ளதாகவும், தற்போதைய நிலவரப்படி தீவிர காற்றழுத்த தாழ்வு மண்டலமாகவே கரையை நெருங்கும் என்றும் கணிக்கப்பட்டுள்ளது. இருப்பினும் இது புயலாக மாறக்கூடுமா என்பது இன்று தெரியவரும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருக்கிறது.

இதுமட்டுமின்றி தெற்கு அந்தமான கடல் மற்றும் அதனையொட்டிய பகுதிகளில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சியும், தென் கிழக்கு அரபிக்கடல் தீவிர காற்றழுத்த தாழ்வுப் பகுதி அதே இடத்திலும் நீடிக்கிறது. இது மேற்கு திசையில் நகர்ந்து காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெறும் என்றும், இதனால் தமிழகத்தில் மழை பெய்யக்கூடும் என்றும் கணிக்கப்பட்டுள்ளது.

அதன்படியே இன்றைய தினம்(அக்.22), விழுப்புரம், செங்கல்பட்டு, மயிலாடுதுறை, கடலூர் மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரியில் ஓருசில இடங்களில் கன முதல் மிக கனமழையும், ஓரிரு இடங்களில் அதிகனமழை பெய்யக்கூடும் என ரெட் அலெர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அதேபோல் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், ராணிப்பேட்டை, திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, அரியலூர், பெரம்பலூர், தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம் மாவட்டங்கள் மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரு சில இடங்களில் கன முதல் மிக கனமழை பெய்யக்கூடும் என எச்சரிக்கப்பட்டுள்ளது. அதேபோல் சேலம், திருச்சிராப்பள்ளி, வேலூர், திருப்பத்தூர், தர்மபுரி மற்றும் புதுக்கோட்டை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யக்கூடும்.
இந்நிலையில் கனமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தமிழகத்தில் இன்று 18 மாவட்டங்களில் கல்வி நிறுவனங்களுக்கு விடுமுறை அறிவித்து அந்தந்த மாவட்ட ஆட்சியர்கள் உத்தரவிட்டுள்ளனர். அதன்படி இன்று (அக்.22) செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர், ராணிப்பேட்டை, விழுப்புரம், கடலூர், தஞ்சாவூர், மயிலாடுதுறை, திருவாரூர், கள்ளக்குறிச்சி, சிவகங்கை, திருச்சி ஆகிய மாவட்டங்களில் பள்ளி கல்லூரிகளுக்கும், சென்னை, சேலம் , நாமக்கல், பெரம்பலூர், புதுக்கோட்டை, கரூர் மாவட்டங்களில் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இதேபோல் புதுச்சேரி, காரைக்காலிலும் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.



