CPCL எண்ணெய் ஆலைக்கு எதிராக உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டுள்ள நில உரிமையாளர்களுக்கு, மறுவாழ்வு மற்றும் மீள்குடியமர்வு நிவாரணம் வழங்க வேண்டும். போராட்டத்தில் ஈடுபட்டுள்ள ஏழை மக்களின் நிலையை அறிந்தும் அரசு கண்டுகொள்ளாமல் இருப்பது ஜனநாயக முறைகளுக்கு எதிரானது என்று முன்னாள் அமைச்சர் ஓ.எஸ்.மணியன் பேட்டி அளித்துள்ளார்.
நாகை மாவட்டம் பனங்குடியில் அமைந்துள்ள CPCL எண்ணெய் ஆலை விரிவாக்கத்திற்காக 620 ஏக்கர் விவசாய நிலங்கள் பனங்குடி, கோபுராஜபுரம், முட்டம், நரிமணம் ஆகிய கிராமங்களில் கையகப் படுத்தப்பட்டுள்ளது. கையகப்படுத்தப்பட்ட நிலத்திற்கான தொகை குறைவாக உள்ளதால், அதை வாங்க மறுத்த நில உரிமையாளர்களின் இழப்பீடு தொகையை CPCL நிருவாகம் நீதிமன்றத்தில் செலுத்தியுள்ளது.
இந்நிலையில் கையகப்படுத்திய நிலத்திற்கு கூடுதலாக மறுவாழ்வு மற்றும் மீள்குடியமர்வு நிவாரணம் கேட்டு நாகை மாவட்டம் பிள்ளை பனங்குடியில், நிலம் வழங்கிய, நில உரிமையாளர்கள், சாகுபடிதாரர்கள் தொழிலாளர்கள் என 100 க்கும் மேற்பட்டோர் கடந்த 6 நாட்களாக தொடர் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
6 வது நாளாக உண்ணவிரத போராட்டத்தில் ஈடுபட்டு வரும் கிராம மக்களை இன்று அதிமுக முன்னாள் அமைச்சர் ஓ.எஸ்.மணியன் சந்தித்து அவர்களது கோரிக்கைகளை கேட்டறிந்தார்.
அதன் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய முன்னாள் அமைச்சர் ஓ.எஸ்.மணியன், 2013 ஆம் ஆண்டு மத்திய அரசு கொண்டு வந்த நில எடுப்பு சட்டத்தின் படி, போராட்டத்தில் ஈடுபட்டுள்ள விவசாயிகளுக்கு மறுவாழ்வு மற்றும் மீள்குடியமர்வு நிவாரணம் வழங்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை வேண்டும் என வலியுறுத்தினார்.
மேலுடம் வாட்டி வதைக்கும் வெயிலில் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டுள்ள ஏழை மக்களின் நிலையை அறிந்தும் அரசு கண்டுகொள்ளாமல் இருப்பது ஜனநாயக முறைகளுக்கு எதிரானது என குற்றஞ்சாட்டினார். எனவே போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மக்களிடம் அரசு பேச்சுவார்த்தை நடத்தி பிரச்சனையை முடிவுக்கு கொண்டு வர வேண்டும் என கேட்டுக்கொண்டார்.