அமெரிக்காவின் ஜாபில் நிறுவனம் ரூ. 2000 கோடி முதலீட்டில் திருச்சியில் தொழிற்சாலை அமைப்பதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் சிகாகோவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் கையெழுத்தானது.
தமிழ்நாட்டிற்கு தொழில் முதலிடுகளை ஈர்ப்பதற்காக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அமெரிக்காவில் சுற்று பயணம் மேற்கொண்டுள்ளார். இந்த பயணத்தின்போது அமெரிக்காவின் முன்னணி நிறுவனங்கள் தமிழ்நாட்டில் தொழில் தொடங்க முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொண்டு வருகின்றன.

அந்த வகையில் அமெரிக்க நாட்டின் சிகாகோவில், ஜாபில் நிறுவனத்திற்கும் தமிழ்நாடு அரசிற்கும் இடையே ரூ. 2000 கோடி முதலீட்டில் திருச்சியில் மின்னணு உற்பத்தி நிறுவனம் அமைப்பதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் முதலமைச்சர் முன்னிலையில் மேற்கொள்ளப்பட்டது. ஆப்பிள், ஹெச்.பி. போன்ற நிறுவனங்களுக்கு மின்னணு உபகரணங்களை விநியோகம் செய்யும் ஜாபில் நிறுவனத்தின் தொழிற்சாலை திருச்சியில் அமைவதன் வாயிலாக 5 ஆயிரம் பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும்.
இதேபோல் அமெரிக்காவின் ராக்வெல் ஆட்டோமேஷன் நிறுவனம் ரூ. 666 கோடி முதலீட்டில் காஞ்சிபுரத்தில் மின்னணு உற்பத்தி நிறுவன விரிவாக்கத்திற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் மேற்கொள்ளப்பட்டது. மேலும், ஆட்டோடெஸ்க் நிறுவனம் தமிழ்நாட்டு இளைஞர்களின் திறன்களை மேம்படுத்துவதற்காகவும், குறு, சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்கள் மற்றும் ஸ்டார்ட்அப்கள் உள்ளிட்ட தொழில்துறை சுற்றுச்சூழல் அமைப்புகளில் போட்டித்தன்மையை மேம்படுத்துவதற்கும் புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டது.