கரூர் அடுத்த குளித்தலை அருகே நடைபெற்ற கபடி போட்டியில் பங்கேற்ற மாணிக்கம் என்பவர் மாரடைப்பால் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.


திண்டுக்கல் மாவட்டம் பாளையம் அருகே காசக்கரன்பட்டியை சேர்ந்த தங்கவேல் என்பவரது மகன் மாணிக்கம் (26). இவர் கரூரில் உள்ள டெக்ஸ்டைலில் வேலை பார்த்து வருகிறார். இவர் கபடி போட்டியில் கலந்துகொண்டு விளையாடியும் இருந்து வந்துள்ளார்.
இந்நிலையில் கரூர் மாவட்டம் குளித்தலை அருகே கணக்கப்பிள்ளையூரில் நடைபெற்ற கபடி போட்டியில் பங்கேற்பதற்காக சென்ற மாணிக்கம், நேற்று இரவு இரண்டு சுற்று போட்டிகளில் வெற்றி பெற்று மூன்றாவது சுற்று போட்டிக்காக ஓய்வு எடுத்துக்கொண்டிருந்தார். அப்போது அவருக்கு திடீரென மாரடைப்பு ஏற்பட்டுள்ளது. நெஞ்சு வலிப்பதாக அருகில் இருந்த நண்பர்களிடம் கூறியதையடுத்து அவர்கள் வாகனத்தின் மூலம் அருகில் உள்ள அய்யர் மலை அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு அழைத்துச் சென்றனர். அங்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு குளித்தலை அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லும்போது வழியிலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.
இதனை அடுத்து அவரது உடல் குளித்தலை அரசு மருத்துவமனை சவக்கடங்கில் வைக்கப்பட்டுள்ளது. கபடி போட்டியில் பங்கேற்று விளையாட வந்த இடத்தில் 26 வயதான இளைஞர் திடீரென மாராடைப்பு ஏற்பட்டு உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. மேலும் மாணிக்கம் இருதய நோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்ததாகவும் கூறப்படுகிறது. இதுகுறித்து குளித்தலை போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
