தி.மு.க. கூட்டணியில் மக்களவைத் தேர்தலில் நடிகர் கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம் கட்சிக்கு மக்களவைத் தொகுதி ஒதுக்கப்படவில்லை.
தி.மு.க கூட்டணியில் மக்கள் நீதி மய்யத்திற்கு ஒரு ராஜ்யசபா சீட் ஒதுக்கீடு
தி.மு.க.- மக்கள் நீதி மய்யம் கட்சிகளிடையே நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கான தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தையில் இழுபறி நீடித்த நிலையில், சென்னை அண்ணா அறிவாலயத்தில் தி.மு.க.வின் தலைவரும், முதலமைச்சருமான மு.க.ஸ்டாலினை மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவரும், நடிகருமான கமல்ஹாசன் நேரில் சந்தித்துப் பேசினார்.
தி.மு.க. கூட்டணியில் மக்கள் நீதி மய்யம் கட்சி இரு மக்களவைத் தொகுதிகளைக் கோரிய நிலையில், மக்கள் நீதி மய்யம் கட்சிக்கு ஒரு மாநிலங்களவை சீட்டை ஒதுக்கியுள்ளது தி.மு.க. இதற்கான ஒப்பந்தத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் ஆகியோர் கையெழுத்திட்டனர்.
உடன்பாடு ஒப்பந்தத்தில் வருகிற 2025- ஆம் ஆண்டு நடைபெற உள்ள மாநிலங்களவைத் தேர்தலில் மக்கள் நீதி மய்யத்திற்கு ஒரு இடம் ஒதுக்கீடு செய்வதென முடிவு செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த கமல்ஹாசன், “மக்களவைத் தேர்தலில் நான் போட்டியிடவில்லை. இந்த தேர்தலில் தி.மு.க.- காங்கிரஸ் கூட்டணிக்கு ஆதரவு அளிக்கிறோம். இது நாட்டுக்கான விஷயம் என்பதால், கைகோர்க்க வேண்டிய இடத்தில் கை கோர்த்திருக்கிறேன். மக்கள் நீதி மய்யம் சார்பில் தி.மு.க. கூட்டணிக் கட்சிகளுக்காக பரப்புரை செய்யப்படும்” எனத் தெரிவித்துள்ளார்.