தனியார் (அப்போலோ) மருத்துவமனைக்கு புற்றுநோய் சிகிச்சை உபகரணங்கள் இறக்குமதி செய்ததில், கப்பல் துறை கட்டணத்தை முறைகேடாகத் திரும்பப் பெற்றதாக சிபிஐ பதிவு செய்த வழக்கை சென்னை உயர் நீதிமன்றம் அதிரடியாக ரத்து செய்து உத்தரவிட்டுள்ளது.


வழக்கின் பின்னணி:
அப்போலோ மருத்துவமனைக்காக ரூ.191.08 கோடி மதிப்பில் புற்றுநோய் பரிசோதனை மற்றும் சிகிச்சைக்கான உபகரணங்களும், அதன் துணைக் கருவிகளும் இறக்குமதி செய்யப்பட்டன. இதற்காக, ‘என்.எஸ்.கே’ (NSK) என்ற நிறுவனம் சார்பில் ரூ.59,23,610 கப்பல் துறை கட்டணமாகச் செலுத்தப்பட்டது.
இதற்கிடையில், இறக்குமதி செய்யப்பட்ட சாதனங்களின் விலை மறுமதிப்பீடு செய்யப்பட்டது. அதன் அடிப்படையில், தாங்கள் கூடுதலாகச் செலுத்தியதாகக் கூறி ரூ.21,85,082/- கட்டணத்தை என்.எஸ்.கே நிறுவனம் திரும்பப் பெற்றது. ஆனால், இந்தத் தொகையைத் திரும்பப் பெற்றதில் முறைகேடு நடந்துள்ளதாகக் கூறி சிபிஐ (CBI) வழக்குப் பதிவு செய்தது.
நீதிமன்றத்தில் மேல்முறையீடு:
இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட சுங்கவரித் துறை அதிகாரி ரோகிதஷ் செராவத் மற்றும் என்.எஸ்.கே நிறுவனத்தின் மேலாளர் என்.லட்சிமணன் ரெட்டி ஆகியோர், தங்களுக்கு எதிராகப் பதிவு செய்யப்பட்ட சிபிஐ வழக்கை ரத்து செய்யக் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்தனர்.
உயர் நீதிமன்றத்தின் அதிரடி தீர்ப்பு:
இந்த மனுவை விசாரித்த நீதிபதி ஜி.கே.இளந்திரையன் சிபிஐ வழக்கை ரத்து செய்து உத்தரவிட்டார். தனது தீர்ப்பில் நீதிபதி குறிப்பிட்டதாவது:
”அதிகப்படியாகச் செலுத்தப்பட்ட கப்பல்துறை கட்டணத்தைத் திரும்பப் பெறுவதற்காக, குற்றம் சாட்டப்பட்டவர்கள் எந்தவொரு போலி ஆவணங்களையும் தயாரிக்கவில்லை. அதற்கான எந்த ஆதாரமும் சிபிஐ தரப்பில் நிரூபிக்கப்படவில்லை.”
ஆதாரங்கள் இல்லாததைக் சுட்டிக்காட்டி, குற்றம் சாட்டப்பட்ட இருவர் மீதான வழக்கையும் ரத்து செய்து நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
