மதுரை மீனாட்சி திருக்கல்யாணம் கோலாகலம்
மதுரை மீனாட்சி திருக்கல்யாணத்திற்கு திருமாங்கல்யம் செய்து அனுப்பி வைத்து கொடுத்ததாக ஐதீகம் கூறப்படும் பெருமைக்குரிய திருமங்கலம் மீனாட்சி சொக்கநாதர் ஆலயத்தில் இன்று மீனாட்சி திருக்கல்யாண வைபவம் வெகு விமர்சியாக நடைபெற்றது. இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
திருக்கல்யாண வைபவத்தை ஒட்டி காலை முதல் சிறப்பு யாகம் நடத்தப்பட்டு சிவாச்சாரியார்கள் வேதமந்திரங்கள் முழங்க வெகு விமர்சியாக திருமண வைபவ விழா தொடங்கியது. 08:30 முதல் 08.59 மணி வரை திருக்கல்யாண வைபவம் ஆனது நடைபெற்றது. வண்ண வண்ண மலர்களால் அலங்கரிக்கப்பட்டு மீனாட்சி அம்மன் பச்சை பட்டு உடுத்தியும் சொக்கநாதர் – பிரியாவிடை, பெருமாள் ஆகியோர் பக்தர்களுக்கு கோவில் திருமண மேடையில் காட்சியளித்தனர்.

தொடர்ந்து சொக்கநாதர் – மீனாட்சிக்கு காப்பு கட்டும் வைபவமும் வேத மந்திரங்கள் முழங்க சிவாச்சாரியார்கள் சொக்கநாதர் – மீனாட்சியாக மேடையில் நின்று மாலை மாற்றும் நிகழ்ச்சியும் நடைபெற்றது. மங்கள வாத்தியங்கள் முழங்க 08.40 மணிக்கு சொக்கநாதர் மீனாட்சி அம்மன் கழுத்தில் மாங்கல்யம் சூட்டும் விழாவானது வெகு விமரிசையாக நடைபெற்றது. தொடர்ந்து சிறப்பு அர்ச்சனை செய்யப்பட்டு ஆராதனை நடைபெற்றது. இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர் பெண்கள் தங்கள் கழுத்தில் அணிந்திருந்த பழைய மாங்கல்யத்தை மாற்றி புதிய திருமாங்கல்யத்தை சூட்டிக் கொண்டனர்.