தமிழ்நாட்டில் அரசு மருத்துவமனைகளில் பிறக்கும் குழந்தைகளுக்கு 1 கிராம் தங்க மோதிரம் வழங்கும் தாய்மாமன் தங்க மோதிரம் திட்டம், பேரறிஞர் அண்ணா பிறந்த நாளான வரும் செப்டம்பர் 15, 2026 அன்று முதலமைச்சர் விஜய் அவர்களால் அதிகாரப்பூர்வமாகத் தொடங்கி வைக்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 
தமிழகத்தில் அரசு மருத்துவமனைகளில் பிறக்கும் குழந்தைகள் மற்றும் தாய்மார்களின் நலனை மேம்படுத்துவதுடன், தமிழர் பாரம்பரியத்தைப் போற்றும் வகையில் புதிய நலத்திட்டம் ஒன்றை தமிழக அரசு அறிவித்துள்ளது. முதலமைச்சர் விஜய் தலைமையில் ஒப்புதல் பெற்றுள்ள ‘வெற்றித் தமிழகம்’ தொலைநோக்கு திட்டங்களின் ஒரு பகுதியாக ‘தாய்மாமன் தங்க மோதிரம் திட்டம்’ அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

இந்த திட்டத்தின் கீழ், தமிழ்நாட்டில் நிரந்தரமாக வசிக்கும் குடும்பங்களைச் சேர்ந்த தாய்மார்கள் அரசு மருத்துவமனைகளில் பிரசவிக்கும் ஒவ்வொரு குழந்தைக்கும் 1 கிராம் தங்க மோதிரம் வழங்கப்படும். தமிழர் பாரம்பரியத்தில் உள்ள ‘தாய்மாமன் சீர்’ என்ற மரபை பிரதிபலிக்கும் வகையில், தமிழக அரசே தாய்மாமனின் பங்கை ஏற்று இந்த பரிசை வழங்குகிறது.
தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிவிப்பின்படி, ஆண்டுதோறும் ரூ.755.83 கோடி நிதி ஒதுக்கீட்டில் இத்திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது. மேலும், 2026 ஜூன் 22 முதல் அரசு மருத்துவமனைகளில் பிறக்கும் அனைத்து குழந்தைகளும் இத்திட்டத்தின் பயனாளிகளாக கருதப்படுவர். பேரறிஞர் அண்ணாவின் பிறந்தநாளான செப்டம்பர் 15, 2026 அன்று முதலமைச்சர் விஜய் இந்த திட்டத்தை அதிகாரப்பூர்வமாக தொடங்கி வைக்க உள்ளார்.
தமிழகத்தில் ஏற்கனவே கர்ப்பிணிப் பெண்களுக்கான நிதியுதவி, இலவச மகப்பேறு சிகிச்சை, புதிதாகப் பிறந்த குழந்தைகளுக்கான பராமரிப்பு சேவைகள், ஊட்டச்சத்து திட்டங்கள் மற்றும் PICME உள்ளிட்ட பல்வேறு தாய்-சேய் நலத் திட்டங்கள் வெற்றிகரமாக செயல்படுத்தப்பட்டு வருகின்றன. அந்த வரிசையில், தாய்மை மற்றும் குழந்தைப் பிறப்பை சிறப்பிக்கும் வகையில் ‘தாய்மாமன் தங்க மோதிரம் திட்டம்’ முக்கியமான திட்டமாக கருதப்படுகிறது. அரசு மருத்துவமனைகளின் மீது மக்களின் நம்பிக்கையை மேலும் வலுப்படுத்துவதோடு, குழந்தையின் பிறப்பை நினைவுகூரும் அடையாளமாகவும் இந்த திட்டம் அமையும் என தமிழக அரசு தெரிவித்துள்ளது.
கத்தார் தீ விபத்தில் உயிரிழந்த 3 தமிழர்கள்.. தலா ரூ.10 லட்சம் நிவாரணம் அறிவித்த முதல்வர் விஜய்….
