4 பல்கலை.களுக்கு பட்டமளிப்பு தேதி அறிவிப்பு
நான்கு பல்கலைகழகங்களுக்கு பட்டமளிப்பு விழா நடத்த தேதிகளை ஆளுநர் மாளிகை அறிவித்துள்ளது.
திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழகத்தில் பட்டப்படிப்பை முடித்து பட்டம் கிடைக்காமல் 2 லட்சம் மாணவர்கள் தவிக்கின்றனர். 9 மாவட்டங்களில் 130க்கும் மேற்பட்ட கல்லூரிகளை சேர்ந்த 2 லட்சம் மாணவர்களுக்கு இதுவரை பட்டம் வழங்கப்படவில்லை. திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழகத்தில் பட்டமளிப்பு விழா இரண்டு முறை அறிவிக்கப்பட்டு பின் தள்ளிப்போனது. 6 மாதங்களே செல்லும்படியாகும் தற்காலிக சான்றிதழ் மட்டுமே பட்டப்படிப்பு முடித்த மாணவர்களுக்கு மட்டுமே வழங்கப்பட்டுள்ளதாக மாணவர் சங்கங்கள் ஆளுநர் மீது குற்றஞ்சாட்டியது.
இந்நிலையில் நான்கு பல்கலைகழகங்களுக்கு பட்டமளிப்பு விழா நடத்த தேதிகளை ஆளுநர் மாளிகை அறிவித்துள்ளது. இதுதொடர்பாக ஆளுநர் மாளிகை வெளியிட்டுள்ள அறிக்கையில், “சென்னை பல்கலை.க்கு ஜூன் 16ம் தேதியும், திருவள்ளுவர் பல்கலை.க்கு ஜூன் 19ம் தேதியும் பட்டமளிப்பு விழா நடத்தப்படும். நாகையில் உள்ள ஜெயலலிதா மீனவ பல்கலை.க்கு ஜூலை 7ம் தேதி பட்டமளிப்பு விழா நடைபெறும். மனோன்மணியம் சுந்தரனார் பல்கலை., பாரதிதாசன் பல்கலை பட்டமளிப்பு விழா ஜூலை, ஆகஸ்ட் மாதங்களில் நடைபெறும்” என அறிவிக்கப்பட்டுள்ளது.