உலகப் புகழ்பெற்ற பாலமேடு ஜல்லிகட்டு நடைபெற்று முடிவடைந்தது. 877 காளைகளும், 345 மாடுபிடி வீரர்களும் பங்கேற்றனர்.
![]()

23 காளைகளை அடக்கிய மாடுபிடி வீரருக்கு முதல் பரிசாக காரும், சிறந்த காளைக்கு பைக் பரிசும் வழங்கப்பட்டது. மாட்டுபொங்கலை முன்னிட்டு மதுரை மாவட்டம் பாலமேடு ஜல்லிகட்டு போட்டி காலை 8 மணிக்கு மாவட்ட ஆட்சியர் தலைமையில் உறுதிமொழி ஏற்புடன் தொடங்கியது. முதலில் கிராம காளைகள் வரிசையாக அவிழ்க்கப்பட்டு பின்னர் போட்டி தொடங்கியது. இந்த போட்டியில் 345 மாடுபிடி வீரர்களும், 877 காளைகளும் பங்கேற்றனர்.
போட்டி தொடங்கியவுடன் முதலில் பாலமேடு கிராம கோவில்களுக்கு சொந்தமான காளைகள் வரிசையாக அவிழ்க்கப்பட்டு பின்னர் போட்டியில் கலந்துகொள்ளும் காளைகள் வரிசையாக வாடிவாசல் வழியாக அவிழ்த்துவிடப்பட்டது. போட்டியில் காளைகளுக்கு சவால் விடுத்து மாடுபிடி வீரர்கள் காளைகளை அடக்கினர். மாடுபிடி வீரர்களையும் துவம்சம் செய்த காளைகள் வெற்றிபெற்றது.
போட்டியில் கலந்துகொண்டு சிறப்பாக களமாடி 23 காளைகளை அடக்கிய மாடுபிடி வீரரான பாலமேடு சின்னப்பட்டியை சேர்ந்த தமிழரசன் என்ற மாடுபிடி வீரருக்கு நிசான் காரும், பரிசுகோப்பையுடன் பாராட்டு சான்றிதழும் வழங்கப்பட்டது, 19 காளைகளை அடக்கிய பாலமேடு பகுதியை சேர்ந்த மணி என்ற மாடுபிடி வீரருக்கு இரண்டாவது பரிசாக ஹோண்டா ஷைன் பைக் ஒன்றும் வழங்கப்பட்டது. போட்டியில் சிறப்பாக விளையாடிய மதுரை ரெங்கராஜபுரம் கருப்பணசுவாமி கோவில் கருப்பன் காளைக்கு முதல்பரிசாக XL பைக் பரிசாக வழங்கப்பட்டது. இரண்டாவதாக சிறந்த காளையாக தேர்வு செய்யப்பட்ட திண்டுக்கல் மானுத்து ரமேஷ் என்பவரது காளைக்கு பசுங்கன்றுடன் கூடிய நாட்டுபசுமாடும் வழங்கப்பட்டது.
இதேபோன்று போட்டியில் கலந்துகொண்டு சிறப்பாக களம் கண்ட சிறந்த மாடுபிடி வீரர்களுக்கும், சிறந்த காளைகளுக்கும் பைக் , தங்க காசு, லேப்டாப், குக்கர், எல்.இ.டி TV, பிரிட்ஜ், தங்ககாசு, கட்டில் மெத்தை, சைக்கிள், பீரோ போன்ற எண்ணற்ற பரிசுகள் வழங்கப்பட்டன. போட்டியில் கலந்துகொண்டு விளையாடி 9 காளைகளை அடக்கிய மாடுபிடி வீரரான அரவிந்த்ராஜனை காளை முட்டியதில் காயம் ஏற்பட்டு சிகிச்சை பலனின்றி மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் உயிரிழந்தார். இதேபோன்று போட்டியில் கலந்துகொண்ட மாடுபிடி வீரர்கள் மற்றும் பார்வையாளர்கள், காளை உரிமையாளர்கள் உள்ளிட்ட 31பேருக்கு காயம் ஏற்பட்டு சிகிச்சையில் உள்ளனர்.
