குழந்தைகளுக்கு அரசு பள்ளிகளில் தரமான கல்வியும், காலை, மதிய உணவுகள் வழங்கப்படுவதால் பிள்ளைகளை சேர்ப்பதாக பெற்றோர்கள் ஆர்வமுடன் தெரிவித்தனர்.அரசு பள்ளிகளில் இன்று முதல் மாணவர் சேர்க்கை தொடங்கியது. முதலாம் வகுப்பு முதல் ஐந்தாம் வகுப்புக்கான சேர்க்கை தொடங்கியது. இதனால் இன்று காலையிலேயே தங்கள் குழந்தைகளை ஏராளமான பெற்றோர்கள் அழைத்து வந்து அரசு பள்ளியில் சேர்த்து வருகின்றனர்.
அரசு பள்ளியில் தரமான கல்வி தற்போது கிடைக்கிறது என்றும் புத்தகங்கள் வண்ண பென்சில்கள், புத்தகப்பை, சீருடை, காலணி என அனைத்தும் இலவசமாக கிடைப்பதாகவும், காலை உணவு, மதிய உணவு வழங்குவதாகவும் ஆசிரியர்கள் சிறப்பாக பாடம் நடத்துவதாகவும் பெற்றோர்கள் பெருமையுடன் தெரிவித்துள்ளனர்.

அரசு பள்ளியில் படிக்கும் மாணவி கூறும் போது தனியார் பள்ளியை விட அரசு பள்ளிகளில் தரமான கல்வி வழங்குகிறார்கள். ஆசிரியர்கள் அக்கறையோடு பாடம் நடத்துகிறார்கள். சந்தேகம் கேட்டால் முறையாக பதில் சொல்கிறார்கள், இங்கு தரமான கல்வி கிடைக்கிறது, பள்ளியை சுத்தமாக வைத்துள்ளனர் என்று பெருமையுடன் மாணவிகளும் தெரிவித்துள்ளனர்.
அரசு பள்ளி ஆசிரியர்கள் கூறும்போது, மாணவர்களுக்கு காலை உணவு வழங்கப்படுவதால் அவர்கள் வகுப்பறையில் உற்சாகமாக பாடம் கற்கின்றனர். அதேபோல மதிய உணவு, பாட நூல்கள், பென்சில், சீருடை, காலணி என அனைத்தும் வழங்கப்படுகிறது. எண்ணும் எழுத்தும் திட்டத்தின் கீழ் மாணவர்களுக்கு கல்வி கற்பித்து கொடுப்பதால், மாணவர்கள் எளிதில் பாடத்தை புரிந்து கொண்டு படிக்கிறார்கள். இதனால் ஆண்டுக்கு ஆண்டு மாணவர் சேர்க்கை அதிகரிப்பதாக தெரிவித்தனர்.
இதனிடையே மணக்காடு பகுதியில் உள்ள சேலம் மாநகராட்சி துவக்க பள்ளிக்கு வந்த மாவட்ட ஆட்சியர் பிருந்தா தேவி மற்றும் மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி கபீர் ஆகியோர் மாணவர்கள் மத்தியில் உரையாற்றினர். தொடர்ந்து மாவட்ட ஆட்சியர் பிருந்தாதேவி குழந்தைகள் மத்தியில் அமர்ந்து அ, ஆ, இ, ஈ, எழுத கற்றுக் கொடுத்தார். அரசு பள்ளிகளில் இந்த ஆண்டு 25 சதவீதம் அளவில் சேர்க்கை அதிகரிக்கும் என முதன்மை கல்வி அதிகாரி கபீர் தெரிவித்துள்ளார்.