மீன்களுக்கு உரிய விலை கிடைக்க வலியுறுத்தி ராமேஸ்வரம் மீனவர்கள் இன்று முதல் காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

ராமேஸ்வரத்தில் மீன்களுக்கு சரியான விலை கிடைக்காததால் மீனவர்கள் பெரும் நஷ்டம் அடைந்துள்ளனர். இதன் தொடர்பாக மீனவர்கள் அரசிடம் பலமுறை கோரிக்கை விடுத்தும் நடவடிக்கை எடுக்கவில்லை எனத் தெரிகிறது. இதனால் ராமேஸ்வரம் மீனவர்கள் இன்று முதல் காலவரையற்ற வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
மீனவர்களின் போராட்டம் காரணமாக துறைமுகம் முகத்தில் சுமார் 700 க்கும் மேற்பட்ட விசைப்படகுகள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. இதன் காரணமாக நாள் ஒன்றுக்கு ஒரு கோடி ரூபாய்க்கு மேல் வருவாய் இழப்பீடு ஏற்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. ஐந்தாயிரத்திற்கும் மேற்பட்ட மீன்பிடித் தொழில் சார்ந்த தொழிலாளர்களின் வாழ்வாதாரமும் கேள்விக்குறியாகி உள்ளது.