தமிழக சட்டப்பேரவைக் கூட்டத்தொடரில் பேசிய கீழ்வேளூர் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் லதா, சட்டப்பேரவைகளிலும் பொதுவெளியிலும் ‘கற்பழிப்பு’ என்ற வார்த்தைக்குப் பதிலாக ‘பாலியல் வன்முறை’ என்ற வார்த்தையைப் பயன்படுத்த வேண்டும் என்று வலியுறுத்திக் கேட்டுக் கொண்டுள்ளார்.
சட்டப்பேரவையில் எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி விவாதத்தின் போது பேசுகையில் ‘கற்பழிப்பு’ என்ற வார்த்தையைப் பயன் படுத்தியதாகக் குறிப்பிட்ட எம்.எல்.ஏ லதா, அந்த வார்த்தைப் பயன்பாட்டின் மீதான தனது எதிர்ப்பைப் பதிவு செய்தார். அப்போது அவர் கூறியதாவது:

முன்னாள் முதலமைச்சரும் எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிசாமி சட்டப்பேரவையில் பேசும்போது ‘கற்பழிப்பு’ என்ற வார்த்தையைப் பயன்படுத்தினார்.
பெண்ணுக்கு மட்டும்தான் கற்பு உள்ளதா, ஆணுக்கு இல்லையா? அத்தகைய காலாவதியான சொற்பதங்களை நமது சட்டமன்றத்தில் தவிர்ப்பது நல்லது.
எனவே, குற்றச் செயல்களைக் குறிப்பிடும்போது ‘கற்பழிப்பு’ என்ற வார்த்தைக்குப் பதிலாக ‘பாலியல் வன்முறை’ என்ற வார்த்தையைச் சட்டப்பேரவையிலும் பொதுவெளியிலும் அனைவரும் பயன்படுத்த வேண்டும் என்று அவர் கேட்டுக்கொண்டார்.
சட்டப்பேரவையில் ஒரு பெண் சட்டமன்ற உறுப்பினர் வார்த்தைப் பயன்பாடு குறித்துச் சுட்டிக்காட்டிய இந்தக் கருத்து அவையில் அனைவரின் கவனத்தையும் ஈர்த்தது.
