எல்லைத் தாண்டி மீன்பிடித்ததாக கூறி காரைக்கால் மற்றும் மயிலாடுதுறை மாவட்டத்தைச் சேர்ந்த 10 மீனவர்களை இலங்கை கடற்படையினர் கைது செய்தனர்.
காரைக்கால் அடுத்த கீழகாசாக்குடி மேடு மீனவர் கிராமத்தைச் சேர்ந்த செல்வமணி என்பவருக்கு சொந்தமான விசைப்படகில் காரைக்கால், மயிலாடுதுறை மாவட்டங்களை சேர்ந்த 10 மீனவர்கள் நேற்று முன்தினம் காரைக்கால் துறைமுகத்தில் இருந்து கடலுக்கு மீன் பிடிக்க சென்றுள்ளனர். இன்று அதிகாலை கோடியக்கரைக்கு தென் கிழக்கே நடுக்கடலில் மீனவர்கள் மீனபிடித்துக் கொண்டிருந்தனர். அப்போது, அங்கு வந்த இலங்கை கடற்படையினர் எல்லைத்தாணடி மீன்பிடித்ததாக கூறி 10 மீனவர்களையும் கைது செய்தனர்.
மேலும் மீனவர்களின் விசைப்படகையும் பறிமுதல் செய்து, விசாரணைக்காக காங்கேசன் துறை கடற்படை முகாமுக்கு அழைத்து சென்றனர். விசாரணைக்கு பின்னர் மீனவர்களை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைக்கப்பட உள்ளனர். இதனிடையே, கைதாகியுள்ள மீனவர்கள் மற்றும் விசைப்படகை மீட்டுத்தர மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என மீனவர்களின் உறவினர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.