பள்ளியில் மயங்கி விழுந்த மாணவி உயிரிழப்பு
அவிநாசி அருகே தனியார் பள்ளியில் மயங்கி விழுந்த 9-ம் வகுப்பு மாணவி உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
திருப்பூர் மாவட்டம் அவிநாசியை அடுத்து தெக்கலூர் பகுதியை சேர்ந்தவர் முருகன் (44). இவரது மனைவி கிருஷ்ணவேணி (34). இவர்கள் இருவரும் அருகில் உள்ள பனியன் நிறுவனத்தில் வேலை செய்து வருகின்றனர். இவர்களுக்கு கபில்தேவ் (16) என்ற மகனும், கந்தேஸ்வரி (14) என்ற மகளும் உள்ளனர். அவிநாசியை அடுத்து நாதம்பாளையம் அருகே உள்ள தனியார் பள்ளியில் கபில்தேவ் 11-ம் வகுப்பும், கந்தேஸ்வரி ஒன்பதாம் வகுப்பும் படித்து வருகின்றனர்.
கந்தேஸ்வரிக்கு காலில் இரத்தக்குழாய் அடைப்பால் பாதிக்கப்பட்டு கடந்த இரண்டு ஆண்டுகளாக சிகிச்சை பெற்று வந்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில் இன்று காலை வழக்கம் போல கந்தேஸ்வரி பள்ளிக்கு சென்று பள்ளியில் காலை நடைபெற்ற இறை வழிபாட்டில் பங்கேற்றுள்ளார். அப்போது திடீரென கந்தேஸ்வரி மயங்கி விழுந்துள்ளார். இதையடுத்து பள்ளி நிர்வாகத்தினர் உடனடியாக கந்தேஸ்வரியை அவிநாசியில் உள்ள தனியார் மருத்துவமனையில் பரிசோதித்ததில் மிக மோசமான நிலையில் உள்ளதாக கூறியதை அடுத்து, உடனடியாக அவிநாசி அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று அனுமதித்தனர். அங்கு அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இது குறித்து அவிநாசி போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.