Homeசெய்திகள்தமிழ்நாடுமல்லிப்பட்டினத்தில் காதலனால் கொலை செய்யப்பட்ட ஆசிரியை உடல் பெற்றோரிடம் ஒப்படைப்பு!

மல்லிப்பட்டினத்தில் காதலனால் கொலை செய்யப்பட்ட ஆசிரியை உடல் பெற்றோரிடம் ஒப்படைப்பு!

-

- Advertisement -

தஞ்சை மல்லிப்பட்டினத்தில் காதலனால் குத்திக் கொல்லப்பட்ட ஆசிரியை ரமணியின் உடல் பிரேத பரிசோதனைக்கு பின்னர் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.

தஞ்சாவூர் மாவட்டம் மல்லிப்பட்டினம் சின்னமலை பகுதியை சேர்ந்தவர் ரமணி (26). இவர் அங்குள்ள அரசுப் உயர்நிலைப் பள்ளியில் தற்காலிக ஆசிரியராக பணிபுரிந்து வந்தார். இவரும் வெளிநாட்டில் வேலை பார்த்துவிட்டு திரும்பிய அதே பகுதியை சேர்ந்த மதன் என்பவரும் காதலித்து வந்துள்ளனர். ரமணியை பெண் கேட்டு மதன் மற்றும் அவரது பெற்றோர்கள் சென்றபோது, ஒரே சமூகத்தினராக இருந்தபோதும், ரமணியின் பெற்றோர்கள் பெண் தர மறுத்துள்ளனர். மதன் நேற்று மீண்டும் ரமணியின் வீட்டிற்கு பெண் கேட்டு சென்றபோதும், அவர்கள் மறுத்துவிட்டனர்.

இந்த நிலையில் இன்று காலை ரமணி பணிபுரியும் அரசு உயர்நிலைப் பள்ளிக்கு வந்த மதன், பள்ளி ஓய்வறையில் இருந்த ரமணியிடம் பேச வேண்டும் என்று வெளியே அழைத்துள்ளார். வெளியே வந்த ரமணியுடன், அவர் வாக்குவாதத்தில் ஈடுபட்டு, தான் மறைத்து வைத்திருந்த கத்தியால் ரமணியின் கழுத்து மற்றும் கைகளில் சரமாரியாக குத்திவிட்டு தப்பியோடினார்.

இதில் ரத்த வெள்ளத்தில் சரிந்த ரமணியை சக ஆசிரியர்கள் மீட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ஆனால் அவர்  வழியிலேயே உயிரிழந்து விட்டார். இதனிடையே, ரமணியை குத்திவிட்டு தப்பியோடிய மதனை, பள்ளி ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் பிடித்து, சேதுபாவாசத்திரம் காவல்துறையினரிடம் ஒப்படைத்தனர்.

கொலை நடந்த பள்ளியில் தஞ்சை சரக டிஐஜி ஜியாவுல் ஹக், மாவட்ட எஸ்பி ஆஷிஷ் ராவத் ஆகியோர் நேரில் பார்வையிட்டு விசாரணை மேற்கொண்டனர். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய டிஐஜி ஜியாவுல் ஹக், காவல் ஆய்வாளர் ரோந்து பணியில் இருந்ததால், உடனடியாக சம்பவ இடத்திற்கு வந்து 30 நிமிடத்திற்குள் குற்றவாளியை கைது செய்ததாக தெரிவித்தார்.

கொலையான ரமணி மற்றும் மதன் ஆகிய இருவரும் ஒரே ஊரை சேர்ந்தவர்கள் என்றும், இருவருக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டுள்ளது என்பது விசாரணையில் தெரிய வந்துள்ளதாகவும் தெரிவித்தார். ஆசிரியர்கள் ஓய்வறையில் தான் கொலை நடந்துள்ளதாகவும், பள்ளியில் காவலாளி இல்லை என்றும் டிஐஜி ஜியாவுல் ஹக் கூறினார். மேலும், ஏற்கனவே தெரிந்த நபர் என்பதால், மதன் யாரையும் கேட்காமல், நேராக பள்ளியின் ஆசிரியர் ஓய்வரைக்கு சென்றுள்ளார் என்றும் அவர் தெரிவித்தார்.

இந்த நிலையில் மல்லிப்பட்டினம் அரசுப்பள்ளியில் கொலை செய்யப்பட்ட ஆசிரியை ரமணியின் உடல் பட்டுக்கோட்டை அரசு மருத்துவமனையில் பிரேத பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. பிரேத பரிசோதனைக்கு பின்னர் ரமணியின் உடல் அவர்களது உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. அப்போது, உயர்கல்வித்துறை அமைச்சர் கோவி.செழியன், பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் உள்ளிட்டோர்   ஆசிரியை ரமணியின் உடலுக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். இதனை தொடர்ந்து, இறுதிச்சடங்கிற்காக அவரது சொந்த ஊருக்கு உடல் எடுத்துச்செல்லப்பட்டது.

MUST READ