நாட்டில் ஐஏஎஸ்/ஐபிஎஸ் அலுவலர்கள் நேர்மையாக இருந்தால், இந்த நாட்டின் மகத்தான மாற்றங்களை உருவாக்க முடியும் என உறுதியாக நம்புகிறேன் என்று முன்னாள் ஐஏஎஸ் அதிகாரி சகாயம் தெரிவித்தார்.
சென்னை மயிலாப்பூரில் உள்ள தனியார் நட்சத்திர விடுதியில் புதிதாய் (Veranda) வெராண்டா ஐ.ஏ.எஸ் அகாடமி அறிமுகப்படுத்தப்பட்டது. இந்த அகாடமியின் தலைமை வழிகாட்டியாக முன்னாள் மாவட்ட ஆட்சியர் சகாயம் ஐஏஎஸ் நியமிக்கப்பட்டுள்ளார்.


அப்போது இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய சகாயம் ஐஏஎஸ்;
(Civil service examination) ஐ.ஏ.எஸ் தேர்வில் தமிழகத்தில் தேர்ச்சி பெறுபவர்களின் எண்ணிக்கை குறைவாக உள்ளது. தமிழ்நாட்டில் அதிக அளவிலான ஐஏஎஸ் அலுவலர்களை உருவாக்கும் வகையில் முழுமையான பயிற்சி மையத்தை வெராண்டா அகாடமி வழங்குகிறது. தமிழகத்தில் எந்த அளவிற்கு அதிகபடியான ஐஏஎஸ் வர வேண்டுமென நினைக்கிறோமோ? அதேநேரத்தில் நேர்மையான அதிகாரியாக இருக்க வேண்டும் என்பது தான் முக்கியம் என்றார்.
நான் இன்னமும் நம்புகிறேன் ஐஏஎஸ்/ஐபிஎஸ் அலுவலர்கள் நேர்மையாக இருந்தால் இந்த நாட்டின் மகத்தான மாற்றங்களை உருவாக்க முடியும் என உறுதியாக உளமார நம்புகிறேன். இதில் தமிழகம் முழுவதும் 150 மாணவர்களை தேர்வு செய்து அதில் முதல் 5 மாணவர்களுக்கு இலவச பயிற்சி அளிக்க உள்ளோம்.
இதில் என்னுடைய பணி என்பது இவர்களுக்கு வழிகாட்ட வேண்டும், இதில் முக்கியமாக ஐ ஏ எஸ் க்கான முக்கிய தேர்வு உள்ளது. அதில் (General Studies) பொது தாள் உள்ளது. அதாவது நான்கு தாள் உள்ளது. அதிலே நான்காவது தாள் நேர்மையை பற்றி இருக்கிறது. 1000 மதிப்பெண் என்றால் நான்காவது தாலுக்கு 250 மதிப்பெண் உள்ளது. ஐ ஏ எஸ் தேர்வில் தேர்ச்சி பெற இந்த கடைசி தாளிலும் தேர்ச்சி பெற வேண்டும். அதனால், இதற்கு என்னை நியமித்திருப்பதாக கூறினார். மேலும், இந்த திட்டத்தின் மூலம் அதிகமாக ஐஏஎஸில் நேர்மையான அதிகாரிகளை உருவாக்க முடியும் என நம்புவதாக தெரிவித்தார்.

இதனைத் தொடர்ந்து தற்போதுள்ள சூழலில் நேர்மையான ஐஏஎஸ் அதிகாரிகள் இல்லையா? என்ற கேள்விக்கு பதில் அளித்த சகாயம் ஐஏஎஸ், பொதுவாக நான் நினைப்பது என்னுடைய 30 ஆண்டுகால அனுபவத்தில் இன்னும் கூடுதலான எண்ணிக்கையில் நேர்மையான ஐஏஎஸ் அதிகாரிகள் இருந்திருந்தால் கூடுதலாக சாதித்திருக்க முடியும் என நம்புகிறேன் என்றார்.
உதாரணமாக 2011 ஆம் ஆண்டில் நான் மாவட்ட ஆட்சியராக இருந்தபோது கிரானைட் எடுப்பதற்காக அரசு போடப்பட்ட அரசாணையை தடுத்து நிறுத்தியவன் நான்! அன்று நான் தடுத்து நிறுத்தியதால் இன்று பாதுகாக்கப்பட்ட ஒன்றாக அது உள்ளது. ஐஏஎஸ் மட்டுமல்ல நேர்மையான வங்கி அதிகாரிகளும் வேண்டும், நேர்மையான ஐஏஎஸ் அதிகாரிகளும் வேண்டும், அதற்கு மேலாக நேர்மையான தலைவர்களும் வேண்டும் என்றார். இவ்வாறு சகாயம் ஐஏஎஸ் தெரிவித்துள்ளார்.
