வேல்ஸ் அறக்கட்டளையின் கணக்குகளைத் தணிக்கை செய்ய உத்தரவிடக் கோரியும், ஐசரி கணேஷ் உள்ளிட்ட அறங்காவலர்கள் முக்கிய முடிவுகள் எடுக்கத் தடை விதிக்கக் கோரியும் அவரது சகோதரி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்துள்ளார்.


ஐசரி கணேஷின் சகோதரி தாக்கல் செய்த மனு!
வேல்ஸ் அறக்கட்டளையின் ஆயுள்கால அறங்காவலரும், ஐசரி கணேஷின் சகோதரியுமான அழகு தமிழ் செல்வி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு ஒன்றைத் தாக்கல் செய்துள்ளார்.
அந்த மனுவில் அவர் குறிப்பிட்டிருப்பதாவது:
“பிரபல மறைந்த நடிகர் ஐசரி வேலனின் நினைவாக கடந்த 1992-ஆம் ஆண்டு சென்னை வேல்ஸ் கல்வி அறக்கட்டளை தொடங்கப்பட்டது. இதன் நிர்வாகத்தில் ஐசரி கணேசன் மற்றும் அவரின் குடும்ப உறுப்பினர்கள் அறங்காவலர்களாக இருந்து வருகின்றனர்.
இந்நிலையில், கடந்த 2004-ஆம் ஆண்டு எனக்கும் சில அறங்காவலர்களுக்கும் தெரியாமல், வேல்ஸ் அறக்கட்டளையின் அறங்காவலர்களின் எண்ணிக்கையைக் குறைக்கும் வகையில் விதிகளில் மாற்றங்களைச் செய்துள்ளனர். மேலும், சில அறங்காவலர்களின் ராஜினாமா கடிதங்களைப் போலியாகத் தயாரித்து, பிற அறங்காவலர்களை நிர்வாகத்தில் இருந்து ஒதுக்கியுள்ளனர்.”
நிதி முறைகேடு & கல்வி நோக்கம் பாதிப்பு!
அறக்கட்டளையின் சொத்துக்கள் தொடர்ந்து அடமானம் வைக்கப்பட்டு, அதன் நிதியானது பிற நிறுவனங்களுக்குத் திருப்பி விடப்பட்டுள்ளதாக மனுவில் குற்றம் சாட்டப்பட்டுள்ளது. முறையான ஒப்புதலின்றி நடைபெற்ற இந்த நிதிப் பரிவர்த்தனைகளால் அறக்கட்டளையின் முதன்மைச் செயல்பாடான கல்வி நோக்கமே பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.
மனுவில் கோரப்பட்டுள்ள முக்கியக் கோரிக்கைகள்:
விதிகள் திருத்தம் செல்லாது: ஏகமனதான ஒப்புதல் இன்றி செய்யப்பட்ட விதிகள் திருத்தங்களைச் செல்லாது என அறிவிக்க வேண்டும்.
கணக்குத் தணிக்கை: வேல்ஸ் அறக்கட்டளையின் அனைத்துக் கணக்கு விவரங்களையும் உடனடியாகத் தணிக்கை (Audit) செய்ய உத்தரவிட வேண்டும்.
முக்கிய முடிவுகளுக்குத் தடை: ஐசரி கணேஷ் உள்ளிட்ட அறங்காவலர்கள் அறக்கட்டளை சார்ந்த முக்கிய முடிவுகளை எடுக்கத் தடை விதிக்க வேண்டும்.
இடைக்கால நிர்வாகி நியமனம்: அறக்கட்டளையைச் சீராக நிர்வகிக்க இடைக்கால நிர்வாகி ஒருவரை உயர் நீதிமன்றமே நியமிக்க வேண்டும்.
சென்னை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ள இந்த மனு விரைவில் விசாரணைக்கு வர உள்ளது குறிப்பிடத்தக்கது.
