விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் திமுக சார்பில் போட்டியிடும் அன்னியூர் சிவா தனது வேட்புமனுவை தாக்கல் செய்தார்.
விக்கிரவாண்டி சட்டமன்ற உறுப்பினராக இருந்த புகழேந்தி உடல்நலக்குறைவு காரணமாக ஏப்ரல் 06ம் தேதி உயிரிழந்தார். இதன் காரணமாக விக்கிரவாண்டி தொகுதி காலியானதாக அறிவிக்கப்பட்டது. இதனையடுத்து விக்கிரவாண்டி சட்டமன்ற தொகுதிக்கான இடைத்தேர்தல் வருகிற ஜூலை 10ம் தேதி நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. ஜூலை 13ம் தேதி வாக்குகள் எண்ணப்பட்டு அன்றைய தினமே முடிவு அறிவிக்கப்படும் எனவும் தெரிவித்துள்ளது. இடைத்தேர்தலில் வெற்றி பெற அரசியல் கட்சிகள் தீவிரம் காட்டி வருகின்றனர். இதுவரை திமுக, பாமக, நாம் தமிழர் கட்சி ஆகியவை தங்களது வேட்பாளர்களை அறிவித்துள்ளனர். விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் போட்டியிடப்போவதில்லை என அதிமுக அறிவித்துள்ளது.
விக்கிரவாண்டி சட்டமன்ற இடைத்தேர்தலில் போட்டியிடும் திமுக வேட்பாளர் அன்னியூர் சிவா வேட்புமனு தாக்கல் செய்தார். தேர்தல் நடத்தும் அலுவலரிடம் தனது வேட்புமனுவை தாக்கல் செய்தார். விக்கிரவாண்டி சட்டமன்ற தொகுதியில் ஜூலை 10ம் தேதி வாக்குப்பதிவு நடைபெற உள்ளது.