தமிழகத்தில் இரண்டு மாவட்டங்களில் வெப்பநிலை 100 டிகிரி பாரன்ஹீட்டை தாண்டியுள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தமிழகத்தில் கடந்த சில நாட்களாக வெயில் வாட்டி வதைத்து வருகிறது. கோடை காலம் தொடங்குவதற்கு முன்பே பகலில் அனல் காற்று வீச தொடங்கியுள்ளது. இதனால் மதிய நேரங்களில் வெளியே செல்லும் பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் மிகுந்த அவதிக்குள்ளாகியுள்ளனர். இந்த நிலையில், நேற்று இரண்டு மாவட்டங்களில் வெப்பநிலை 100 டிகிரி பாரன்ஹீட்டை தாண்டியுள்ளது. அதாவது ஈரோட்டில் நேற்று 102.2 டிகிரி பாரன்ஹீட் வெப்பநிலை பதிவாகியுள்ளது. இதேபோல், வேலூரிலும் நேற்று 100 டிகிரி வெப்பநிலை பதிவாகியுள்ளது.
இதனிடையே தமிழகம் மற்றும் புதுச்சேரியில் இன்று முதல் வருகிற 11ம் தேதி வரை வறண்ட வானிலை நிலவக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. குறிப்பாக 05.03.2024 மற்றும் 06.03.2024: தமிழகத்தில் ஓரிரு இடங்களில் அதிகபட்ச வெப்பநிலை இயல்பை விட 2 முதல் 3 டிகிரி செல்சியஸ் அதிகமாக இருக்கக்கூடும். அதிக வெப்பநிலை மற்றும் அதிக ஈரப்பதம் இருக்கும் பொழுது அசௌகரியம் ஏற்படலாம் என தெரிவித்துள்ளது.