![ஜூலை -1 முதல் மின்கட்டணம் உயர்கிறதா?](https://www.apcnewstamil.com/wp-content/uploads/2023/06/eb.jpg)
வரும் ஜூலை 1ஆம் தேதி முதல் மின்சார கட்டணம் உயர்த்தப்படுகிறது என்ற தகவலால் தமிழக மக்கள் அதிர்ந்து போய் இருக்கிறார்கள். ஆனால் தமிழ்நாடு மின்சார வாரியமோ, தற்போது தமிழகத்தில் நடைமுறையில் இருக்கின்ற மின்சார கட்டணத்தில் எந்த ஒரு மாற்றமும் இல்லை என்று தகவல் தெரிவிக்கிறது.
![ஜூலை -1 முதல் மின்கட்டணம் உயர்கிறதா?](https://www.apcnewstamil.com/wp-content/uploads/2023/06/eb1.jpg)
ஜூலை 1ஆம் தேதி முதல் மின்சார கட்டணத்தை ஆறு சதவிகிதம் அல்லது மின்வாரியத்தின் பணவீக்கம் 4.7 சதவிகிதம் உயர்த்திக் கொள்ளலாம் என்று மின்சார ஒழுங்குமுறை ஆணையம் கடந்த ஆண்டு அறிவித்து இருந்தது. இந்த நிலையில்தான், நுகர்வோர் விலைகுறியீடு உயர்வின் படி மின்சார கட்டணத்தை உயர்த்த மின்சார ஒழுங்குமுறை ஆணையம் அனுமதி அளித்திருந்ததால், இந்த மின்சார
ஒழுங்குமுறை ஆணையத்தின் அறிவிப்பை அடிப்படையாகக் கொண்டுதான் ஜூலை மாதம் கட்டணம் உயர்த்தப்பட இருக்கிறது என்ற தகவல்கள் பரவி வருகின்றன.
இந்த தகவல்களால் தமிழக மக்கள் அதிர்ந்து போயிருக்கும் நிலையில் மின்சார கட்டணம் உயர்த்தப்பட இருப்பதற்கு அரசியல் கட்சி தலைவர்களும், பொது மக்களும் கடும் எதிர்ப்புகள் தெரிவித்து வந்தனர் . கடும் எதிர்ப்புகளுக்கு இடையில் தமிழகத்தில் தற்போது நடைமுறையில் இருக்கின்ற மின்சார கட்டணத்தில் எந்தவித மாற்றமும் இருக்காது என்று அறிவித்திருக்கிறது மின்சார வாரியம்.