வங்கக் கடலில் வலுப்பெறும் புயல் சின்னம் அடுத்த 24 மணி நேரத்தில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
தென்கிழக்கு வங்கக் கடலில் நிலவி வந்த காற்றழுத்த தாழ்வு பகுதி, தற்போது காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றுள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம், அடுத்த 24 மணி நேரத்தில் மேலும் வலுவடைந்து ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறக்கூடும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
வானிலை ஆய்வு மையத்தின் தகவலின்படி, இந்த காற்றழுத்த தாழ்வு மண்டலத்தின் மையம் தற்போது சென்னையில் இருந்து சுமார் 1,270 கிலோமீட்டர் தெற்கு-தென்கிழக்கிலும், கரைக்காலில் இருந்து சுமார் 1,150 கிலோமீட்டர் தென்கிழக்கிலும் அமைந்துள்ளது.

மேலும், இந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் மேற்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து, தென்மேற்கு வங்கக் கடல் பகுதிக்குள் செல்லும் என எதிர்பார்க்கப்படுகிறது. நகர்வின் போது இது மேலும் வலுவடைந்து, ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறும் வாய்ப்பு உள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.
இந்த வானிலை மாற்றத்தை தொடர்ந்து, வங்கக் கடல் மற்றும் அதை ஒட்டிய கடலோர பகுதிகளில் மீனவர்கள் எச்சரிக்கையுடன் இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. நிலைமையை தொடர்ந்து கண்காணித்து வருவதாகவும், தேவையான நேரத்தில் கூடுதல் எச்சரிக்கைகள் வெளியிடப்படும் என்றும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.


