Homeதிருக்குறள்21 – தீவினையச்சம் - கலைஞர் மு. கருணாநிதி விளக்க உரை

21 – தீவினையச்சம் – கலைஞர் மு. கருணாநிதி விளக்க உரை

-

- Advertisement -

21 – தீவினையச்சம் - கலைஞர் மு. கருணாநிதி விளக்க உரை

201. தீவினையார் அஞ்சார் விழுமியார் அஞ்சுவர்
        தீவினை யென்னுஞ் செருக்கு.

கலைஞர் குறல் விளக்கம்  – தீயவர்கள் தீவினை செய்ய அஞ்சமாட்டார்கள்; தீவினையால் மகிழ்ச்சி ஏற்படுவதாயினும் அதனைச் செய்திடச் சான்றோர் அஞ்சி நடுங்குவார்கள்.

202. தீயவை தீய பயத்தலால் தீயவை
        தீயினும் அஞ்சப் படும்.

கலைஞர் குறல் விளக்கம்  – தீய செயல்களால் தீமையே விளையும் என்பதால் அச்செயல்களைத் தீயை விடக் கொடுமையானவையாகக் கருதி அவற்றைச் செய்திட அஞ்சிட வேண்டும்.

203. அறிவினு ளெல்லாந் தலையென்ப தீய
        செறுவார்க்குஞ் செய்யா விடல்.

கலைஞர் குறல் விளக்கம்  – தீமை செய்தவர்க்கு அதையே திருப்பிச் செய்யாமலிருத்தலை, எல்லா அறிவிலும் முதன்மையான அறிவு என்று போற்றுவர்.

204. மறந்தும் பிறன்கேடு சூழற்க சூழின்
        அறஞ்சூழுஞ் சூழ்ந்தவன் கேடு.

கலைஞர் குறல் விளக்கம்  – மறந்தும்கூட மற்றவர்க்குக் கேடு செய்ய நினைக்கக் கூடாது; அப்படி நினைத்தால் அவனுக்குக் கேடு உண்டாக்க அவனை அறம் முற்றுகையிட்டு விடும்.

205. இலனென்று தீயவை செய்யற்க செய்யின்
        இலனாகும் மற்றும் பெயர்த்து

கலைஞர் குறல் விளக்கம்  – வறுமையின் காரணமாக ஒருவன் தீய செயல்களில் ஈடுபடக்கூடாது: அப்படி ஈடுபட்டால் மீண்டும் அவன் வறுமையிலேயே வாட வேண்டியிருக்கும்.

206. தீப்பால தான்பிறர்கண் செய்யற்க நோயப்பால
        தன்னை அடல்வேண்டா தான்.

கலைஞர் குறல் விளக்கம்  – வேதனை விளைவிக்கும் தீய செயல்கள்: தன்னைத் தாக்கலாகாது என எண்ணுகிறவன் அவனும் அத் தீங்குகளைப் பிறருக்குச் செய்யாமல் இருக்க வேண்டும்.

207. எனைப்பகை யுற்றாரும் உய்வர் வினைப்பகை
        வீயாது பின்சென் றடும்.

கலைஞர் குறல் விளக்கம்  – ஒருவர் நேரடியான பகைக்குத் தப்பி வாழ முடியும்; ஆனால் அவர் செய்யும் தீய வினைகள் பெரும் பகையாகி அவரைத் தொடர்ந்து வருத்திக்கொண்டே இருக்கும்.

208. தீயவை செய்தார் கெடுதல் நிழல்தன்னை
        வீயா தடியுறைந் தற்று.

கலைஞர் குறல் விளக்கம்  – ஒருவருடைய நிழல் அவருடனேயே ஒன்றியிருப் பதைப்போல் தீய செயல்களில் ஈடுபடுகிறவர்களை விட்டுத் தீமையும் விலகாமல், தொடர்ந்து ஒட்டிக் கொண்டிருக்கும்.

209. தன்னைத்தான் காதல னாயின் எனைத்தொன்றுந்
        துன்னற்க தீவினைப் பால்.

கலைஞர் குறல் விளக்கம்  – தனது நலத்தை விரும்புகிறவன் தீய செயல்களின் பக்கம் சிறிதளவுகூட நெருங்கலாகாது.

210. அருங்கேடன் என்ப தறிக மருங்கோடித்
        தீவினை செய்யான் எனின்.

கலைஞர் குறல் விளக்கம்  – வழிதவறிச் சென்று பிறர்க்குத் தீங்கு விளைவிக்காதவர்க்கு எந்தக் கேடும் ஏற்படாது என்பதை அறிந்து கொள்க.

MUST READ