Homeதிருக்குறள்70 - மன்னரைச் சேர்ந்து ஒழுகல் ,கலைஞர் மு. கருணாநிதி, விளக்க உரை

70 – மன்னரைச் சேர்ந்து ஒழுகல் ,கலைஞர் மு. கருணாநிதி, விளக்க உரை

-

- Advertisement -

70 ,மன்னரைச் சேர்ந்து ஒழுகல் ,கலைஞர், மு. கருணாநிதி விளக்க உரை,

691. அகலா தணுகாது தீக்காய்வார் போல்க
        இகல்வேந்தர்ச் சேர்ந்தொழுகு வார்

கலைஞர் குறல் விளக்கம்முடிமன்னருடன் பழகுவோர் நெருப்பில் குளிர் காய்வதுபோல அதிகமாக நெருங்கிவிடாமலும், அதிகமாக நீங்கி விடாமலும் இருப்பார்கள்.

692. மன்னர் விழைப விழையாமை மன்னரான்
        மன்னிய ஆக்கந் தரும்

கலைஞர் குறல் விளக்கம்மன்னர் விரும்புகின்றவைகளைத் தமக்கு வேண்டுமெனத் தாமும் விரும்பாமலிருத்தல் அவர்க்கு அந்த மன்னர் வாயிலாக நிலையான ஆக்கத்தை அளிக்கும்.

693. போற்றின் அரியவை போற்றல் கடுத்தபின்
        தேற்றுதல் யார்க்கும் அரிது

கலைஞர் குறல் விளக்கம்தமக்கு மேலேயுள்ளவர்களிடத்திலிருந்து தம்மைக் காத்துக் கொள்ள விரும்புகிறவர்கள், பொறுத்துக் கொள்ள முடியாத குற்றங்களைச் செய்யாமல் இருக்கவேண்டும். அப்படிச் செய்து விட்டால் அதன் பிறகு தம் மீது ஏற்பட்ட சந்தேகத்தை நீக்குவது எளிதான காரியமல்ல.

694. செவிச்சொல்லுஞ் சேர்ந்த நகையும் அவித்தொழுகல்
        ஆன்ற பெரியா ரகத்து

கலைஞர் குறல் விளக்கம்ஆற்றல் வாய்ந்த பெரியவர்கள் முன்னே, மற்றவர்கள் காதுக்குள் பேசுவதையும். அவர்களுடன் சேர்ந்து சிரிப்பதையும் தவிர்த்து. அடக்கமெனும் பண்பைக் காத்திடல் வேண்டும்.

695. எப்பொருளும் ஓரார் தொடரார்மற் றப்பொருளை
        விட்டக்காற் கேட்க மறை

கலைஞர் குறல் விளக்கம்பிறருடன் மறைவாகப் பேசிக் கொண்டிருக்கும்போது அதைஒட்டுக் கேட்கவும் கூடாது; அது என்னவென்று வினவிடவும் கூடாது அவர்களே அதுபற்றிச் சொன்னால் மட்டுமே கேட்டுக்கொள்ள வேண்டும்.

696. குறிப்பறிந்து காலங் கருதி வெறுப்பில்
        வேண்டுப வேட்பச் சொலல்

கலைஞர் குறல் விளக்கம்ஒருவரின் மனநிலை எவ்வாறு உள்ளது என்பதை அறிந்து, தக்க காலத்தைத் தேர்ந்தெடுத்து, வெறுப்புக் குரியவைகளை விலக்கி, விரும்பத் தக்கதை மட்டுமே. அவர் விரும்பும் வண்ணம் சொல்ல வேண்டும்.

697. வேட்பன சொல்லி வினையில் எஞ்ஞான்றும்
        கேட்பினும் சொல்லா விடல்

கலைஞர் குறல் விளக்கம்விரும்பிக் கேட்டாலும் கூட. பயனுள்ளவற்றை மட்டுமே சொல்லிப் பயனற்றவைகளைச் சொல்லாமல் விட்டுவிட வேண்டும்

698. இளையர் இனமுறையர் என்றிகழார் நின்ற
        ஒளியோ டொழுகப் படும்

கலைஞர் குறல் விளக்கம்எமக்கு இளையவர்தான்; இன்ன முறையில் உறவுடையவர் தான் என்று ஆட்சிப் பொறுப்பில் இருப்போரை இகழ்ந்துரைக்காமல், அவர்கள் அடைந்துள்ள பெருமைக் கேற்பப் பண்புடன் நடந்து கொள்ள வேண்டும்.

699. கொளப்பட்டேம் என்றெண்ணிக் கொள்ளாத செய்யார்
        துளக்கற்ற காட்சி யவர்

கலைஞர் குறல் விளக்கம்ஆட்சியால் நாம் ஏற்றுக் கொள்ளப்பட்டவராயிற்றே என்ற துணிவில், ஏற்றுக்கொள்ள முடியாத காரியங்களைத் தெளிந்த அறிவுடையவர்கள் செய்ய மாட்டார்கள்.

700. பழையம் எனக்கருதிப் பண்பல்ல செய்யும்
        கெழுதகைமை கேடு தரும்

கலைஞர் குறல் விளக்கம்நெடுங்காலமாக நெருங்கிப் பழகுகிற காரணத்தினாலேயே தகாத செயல்களைச் செய்திட உரிமை எடுத்துக்கொள்வது கேடாகவே முடியும்.

70 – மன்னரைச் சேர்ந்து ஒழுகல் ,கலைஞர் மு. கருணாநிதி விளக்க உரை

70 – MANNARAICH SERNTHU OZHUKAL,  KALAINGAR KURAL VILLAKAM, THIRUKURAL,

 

MUST READ