Homeதிருக்குறள்84 – பேதைமை, கலைஞர் மு. கருணாநிதி, விளக்க உரை

84 – பேதைமை, கலைஞர் மு. கருணாநிதி, விளக்க உரை

-

- Advertisement -

84 – பேதைமை, கலைஞர் மு. கருணாநிதி, விளக்க உரை

831.பேதைமை என்பதொன் றியாதெனின் ஏதங்கொண்
       டூதியம் போக விடல்

கலைஞர் குறல் விளக்கம்கேடு விளைவிப்பது எது? நன்மை தருவது எது? என்று தெளிவடையாமல் நன்மையை விடுத்துத் தீமையை நாடுவதே பேதைமை என்பதற்கான எடுத்துக்காட்டாகும்.

832. பேதைமையுள் எல்லாம் பேதைமை காதன்மை
        கையல்ல தன்கண் செயல்

கலைஞர் குறல் விளக்கம்தன்னால் இயலாத செயல்களை விரும்பி, அவற்றில் தலையிடுவது என்பது பேதைமைகளில் எல்லாம் மிகப்பெரிய பேதைமையாகும்.

833. நாணாமை நாடாமை நாரின்மை யாதொன்றும்
        பேணாமை பேதை தொழில்

கலைஞர் குறல் விளக்கம்வெட்கப்பட வேண்டியதற்கு வெட்கப்படாமலும், தேட வேண்டியதைத் தேடிப் பெறாமலும், அன்புகாட்ட வேண்டியவரிடத்தில் அன்பு காட்டாமலும், பேணிப் பாதுகாக்கப்பட வேண்டியவற்றைப் பாதுகாக்காமலும் இருப்பது பேதைகளின் இயல்பாகும்.

834. ஓதி உணர்ந்தும் பிறர்க்குரைத்தும் தானடங்காப்
        பேதையிற் பேதையார் இல்

கலைஞர் குறல் விளக்கம்படித்தும், படித்ததை உணர்ந்தும், உணர்ந்ததைப் பலருக்கு உணர்த்திடவும் கூடியவர்கள், தாங்கள் மட்டும் அவ்வாறு நடக்காமலி ருந்தால் அவர்களைவிடப் பேதைகள் யாரும் இருக்க முடியாது.

835. ஒருமைச் செயலாற்றும் பேதை எழுமையும்
        தான்புக் கழுந்தும் அளறு

கலைஞர் குறல் விளக்கம்தன்னிச்சையாகச் செயல்படும் பேதை, எக் காலத்திலும் துன்பமெனும் சகதியில் அழுந்திக் கிடக்க நேரிடும்.

836. பொய்படும் ஒன்றோ புனைபூணும் கையறியாப்
        பேதை வினைமேற் கொளின்

கலைஞர் குறல் விளக்கம்நேர்மை வழி அறியாத மூடர், மேற்கொண்ட செயலைத் தொடர முடியாமல், அதனால் அச்செயலும் கெட்டுத் தம்மையும் தண்டித்துக் கொள்வர்.

837. ஏதிலார் ஆரத் தமர்பசிப்பர் பேதை
        பெருஞ்செல்வம் உற்றக் கடை

கலைஞர் குறல் விளக்கம்அறிவில்லாப் பேதைகளிடம் குவியும் செல்வம், அயலார் சுருட்டிக் கொள்ளப் பயன்படுமேயல்லாமல், பசித்திருக்கும் பாசமுள்ள சுற்றத்தாருக்குப் பயன்படாது.

838. மையல் ஒருவன் களித்தற்றாற் பேதைதன்
       கையொன் றுடைமை பெறின்

கலைஞர் குறல் விளக்கம்நல்லது கெட்டது தெரியாதவன் பேதை; அந்தப் பேதையின் கையில் ஒரு பொருளும் கிடைத்துவிட்டால், பித்துப் பிடித்தவர்கள் கள்ளையும் குடித்துவிட்ட கதையாக ஆகிவிடும்.

839. பெரிதினிது பேதையார் கேண்மை பிரிவின்கண்
        பீழை தருவதொன் றில்

கலைஞர் குறல் விளக்கம்அறிவற்ற பேதைகளுடன் கொள்ளும் நட்பு மிகவும் இனிமையானது; ஏனென்றால் அவர்களிடமிருந்து பிரியும்போது எந்தத் துன்பமும் ஏற்படுவதில்லை.

840. கழாஅக்கால் பள்ளியுள் வைத்தற்றாற் சான்றோர்
       குழாஅத்துப் பேதை புகல்

கலைஞர் குறல் விளக்கம்அறிஞர்கள் கூடியுள்ள மன்றத்தில் ஒரு முட்டாள். நுழைவது என்பது அசுத்தத்தை மிதித்த காலைக் கழுவாமலே படுக்கையில் வைப்பதைப் போன்றது.

MUST READ