831.பேதைமை என்பதொன் றியாதெனின் ஏதங்கொண்
டூதியம் போக விடல்
கலைஞர் குறல் விளக்கம் – கேடு விளைவிப்பது எது? நன்மை தருவது எது? என்று தெளிவடையாமல் நன்மையை விடுத்துத் தீமையை நாடுவதே பேதைமை என்பதற்கான எடுத்துக்காட்டாகும்.
832. பேதைமையுள் எல்லாம் பேதைமை காதன்மை
கையல்ல தன்கண் செயல்
கலைஞர் குறல் விளக்கம் – தன்னால் இயலாத செயல்களை விரும்பி, அவற்றில் தலையிடுவது என்பது பேதைமைகளில் எல்லாம் மிகப்பெரிய பேதைமையாகும்.
833. நாணாமை நாடாமை நாரின்மை யாதொன்றும்
பேணாமை பேதை தொழில்
கலைஞர் குறல் விளக்கம் – வெட்கப்பட வேண்டியதற்கு வெட்கப்படாமலும், தேட வேண்டியதைத் தேடிப் பெறாமலும், அன்புகாட்ட வேண்டியவரிடத்தில் அன்பு காட்டாமலும், பேணிப் பாதுகாக்கப்பட வேண்டியவற்றைப் பாதுகாக்காமலும் இருப்பது பேதைகளின் இயல்பாகும்.
834. ஓதி உணர்ந்தும் பிறர்க்குரைத்தும் தானடங்காப்
பேதையிற் பேதையார் இல்
கலைஞர் குறல் விளக்கம் – படித்தும், படித்ததை உணர்ந்தும், உணர்ந்ததைப் பலருக்கு உணர்த்திடவும் கூடியவர்கள், தாங்கள் மட்டும் அவ்வாறு நடக்காமலி ருந்தால் அவர்களைவிடப் பேதைகள் யாரும் இருக்க முடியாது.
835. ஒருமைச் செயலாற்றும் பேதை எழுமையும்
தான்புக் கழுந்தும் அளறு
கலைஞர் குறல் விளக்கம் – தன்னிச்சையாகச் செயல்படும் பேதை, எக் காலத்திலும் துன்பமெனும் சகதியில் அழுந்திக் கிடக்க நேரிடும்.
836. பொய்படும் ஒன்றோ புனைபூணும் கையறியாப்
பேதை வினைமேற் கொளின்
கலைஞர் குறல் விளக்கம் – நேர்மை வழி அறியாத மூடர், மேற்கொண்ட செயலைத் தொடர முடியாமல், அதனால் அச்செயலும் கெட்டுத் தம்மையும் தண்டித்துக் கொள்வர்.
837. ஏதிலார் ஆரத் தமர்பசிப்பர் பேதை
பெருஞ்செல்வம் உற்றக் கடை
கலைஞர் குறல் விளக்கம் – அறிவில்லாப் பேதைகளிடம் குவியும் செல்வம், அயலார் சுருட்டிக் கொள்ளப் பயன்படுமேயல்லாமல், பசித்திருக்கும் பாசமுள்ள சுற்றத்தாருக்குப் பயன்படாது.
838. மையல் ஒருவன் களித்தற்றாற் பேதைதன்
கையொன் றுடைமை பெறின்
கலைஞர் குறல் விளக்கம் – நல்லது கெட்டது தெரியாதவன் பேதை; அந்தப் பேதையின் கையில் ஒரு பொருளும் கிடைத்துவிட்டால், பித்துப் பிடித்தவர்கள் கள்ளையும் குடித்துவிட்ட கதையாக ஆகிவிடும்.
839. பெரிதினிது பேதையார் கேண்மை பிரிவின்கண்
பீழை தருவதொன் றில்
கலைஞர் குறல் விளக்கம் – அறிவற்ற பேதைகளுடன் கொள்ளும் நட்பு மிகவும் இனிமையானது; ஏனென்றால் அவர்களிடமிருந்து பிரியும்போது எந்தத் துன்பமும் ஏற்படுவதில்லை.
840. கழாஅக்கால் பள்ளியுள் வைத்தற்றாற் சான்றோர்
குழாஅத்துப் பேதை புகல்
கலைஞர் குறல் விளக்கம் – அறிஞர்கள் கூடியுள்ள மன்றத்தில் ஒரு முட்டாள். நுழைவது என்பது அசுத்தத்தை மிதித்த காலைக் கழுவாமலே படுக்கையில் வைப்பதைப் போன்றது.