Homeதிருக்குறள்86 – இகல், கலைஞர் மு. கருணாநிதி, விளக்க உரை

86 – இகல், கலைஞர் மு. கருணாநிதி, விளக்க உரை

-

- Advertisement -

86 – இகல், கலைஞர் மு. கருணாநிதி, விளக்க உரை

851. இகலென்ப எல்லா உயிர்க்கும் பகலென்னும்
        பண்பின்மை பாரிக்கும் நோய்

கலைஞர் குறல் விளக்கம்மனமாறுபாடு காரணமாக ஏற்படுகிற பகையுணர்வு மக்களை ஒன்று சேர்ந்து வாழ முடியாமல் செய்கிற தீய பண்பாகும்.

852. பகல்கருதிப் பற்றா செயினும் இகல்கருதி
        இன்னாசெய் யாமை தலை

கலைஞர் குறல் விளக்கம்வேற்றுமை கருதி வெறுப்பான செயல்களில் ஒருவன் ஈடுபடுகிறான் என்றாலும் அவனோடு கொண்டுள்ள மாறுபாடு காரணமாக அவனுக்குத் துன்பம் தரும் எதனையும் செய்யாதிருப்பதே சிறந்த பண்பாகும்.

853. இகலென்னும் எவ்வநோய் நீக்கின் தவலில்லாத்
        தாவில் விளக்கம் தரும்

கலைஞர் குறல் விளக்கம்மனமாறுபாடு என்னும் நோயை யார் தங்கள் மனத்தை விட்டு அகற்றி விடுகிறார்களோ அவர்களுக்கு மாசற்ற நீடித்த புகழ் உண்டாகும்.

854. இன்பத்துள் இன்பம் பயக்கும் இகலென்னும்
        துன்பத்துள் துன்பங் கெடின்

கலைஞர் குறல் விளக்கம்துன்பத்திலேயே பெருந்துன்பம் பகையுணர்வுதான். அந்த உணர்வை ஒருவன் அகற்றி விடுவானேயானால், அது இன்பத்திலேயே பெரும் இன்பமாகும்.

855. இகலெதிர் சாய்ந்தொழுக வல்லாரை யாரே
        மிகலூக்கும் தன்மை யவர்

கலைஞர் குறல் விளக்கம்மனத்தில் மாறுபாடான எண்ணம் உருவானால் அதற்கு இடம் தராமல் நடக்கக்கூடிய ஆற்றலுடையவர்களை வெல்லக்கூடியவர்கள் யாருமில்லை.

856. இகலின் மிகலினி தென்பவன் வாழ்க்கை
        தவலும் கெடலும் நணித்து

கலைஞர் குறல் விளக்கம்மாறுபாடு கொண்டு எதிர்ப்பதால் வெற்றி பெறுவது எளிது என எண்ணிச் செயல்படுபவரின் வாழ்க்கை, விரைவில் தடம்புரண்டு கெட்டொழியும்.

857. மிகல்மேவல் மெய்ப்பொருள் காணார் இகல்மேவல்
       இன்னா அறிவி னவர்

கலைஞர் குறல் விளக்கம்பகை உணர்வு கொள்ளும் தீய அறிவுடையவர்கள் வெற்றிக்கு வழிகாட்டும் உண்மைப் பொருளை அறியமாட்டார்கள்.

858. இகலிற் கெதிர்சாய்தல் ஆக்கம் அதனை
        மிகலூக்கின் ஊக்குமாங் கேடு

கலைஞர் குறல் விளக்கம்மனத்தில் தோன்றும் மாறுபாட்டை எதிர்கொண்டு நீக்கிக் கொண்டால் நன்மையும், அதற்கு மாறாக அதனை மிகுதியாக ஊக்கப்படுத்தி வளர்த்துக் கொண்டால் தீமையும் விளையும்

859. இகல்காணான் ஆக்கம் வருங்கால் அதனை
        மிகல்காணும் கேடு தரற்கு

கலைஞர் குறல் விளக்கம்ஒருவன் தனக்கு நன்மை வரும்போது மாறுபாட்டை நினைக்காமலே இருப்பான். ஆனால் தனக்குத் தானே கேடு தேடிக் கொள்வதென்றால் அந்த மாறுபாட்டைப் பெரிதுபடுத்திக் கொள்வான்.

860. இகலானாம் இன்னாத எல்லாம் நகலானாம்
        நன்னயம் என்னும் செருக்கு

கலைஞர் குறல் விளக்கம்மனமாறுபாடு கொண்டு பகையுணர்வைக் காட்டுவோரைத் துன்பங்கள் தொடரும். நட்புணர்வோடு செயல்படுவோர்க்குப் பெரு மகிழ்ச்சி எனும் நற்பயன் விளையும்.

MUST READ