Homeதிருக்குறள்92 -  வரைவின் மகளிர்,கலைஞர் மு. கருணாநிதி, விளக்க உரை

92 –  வரைவின் மகளிர்,கலைஞர் மு. கருணாநிதி, விளக்க உரை

-

- Advertisement -

92 -  வரைவின் மகளிர்,கலைஞர் மு. கருணாநிதி, விளக்க உரை

911. அன்பின் விழையார் பொருள்விழையும் ஆய்தொடியார்
        இன்சொல் இழுக்குத் தரும்

கலைஞர் குறல் விளக்கம்அன்பே இல்லாமல் பொருள் திரட்டுவதையே குறிக்கோளாகக் கொண்ட பொதுமகளிர் இனிமையாகப் பேசுவதை நம்பி ஏமாறுகிறவர்களுக்கு இறுதியில் துன்பமே வந்து சேரும்.

912. பயன்தூக்கிப் பண்புரைக்கும் பண்பின் மகளிர்
        நயன்தூக்கி நள்ளா விடல்

கலைஞர் குறல் விளக்கம்ஆதாயத்தைக் கணக்கிட்டு அதற்கேற்றவாறு பாகு மொழிபேசும் பொதுமகளிர் உறவை ஒருபோதும் நம்பி ஏமாறக்கூடாது.

913. பொருட்பெண்டிர் பொய்ம்மை முயக்கம் இருட்டறையில்
        ஏதில் பிணந்தழீஇ அற்று

கலைஞர் குறல் விளக்கம்விலைமாதர்கள் பணத்துக்காக மட்டுமே ஒருவரைத் தழுவிப் பொய்யன்பு காட்டி நடிப்பது. இருட்டறையில் ஓர் அந்நியப் பிணத்தை அணைத்துக் கிடப்பது போன்றதாகும்.

914. பொருட்பொருளார் புன்னலந் தோயார் அருட்பொருள்
        ஆயும் அறிவி னவர்

கலைஞர் குறல் விளக்கம்அருளை விரும்பி ஆராய்ந்திடும் அறிவுடையவர்கள் பொருளை மட்டுமே விரும்பும் விலைமகளிரின் இன்பத்தை இழிவானதாகக் கருதுவார்கள்.

915. பொதுநலத்தார் புன்னலந் தோயார் மதிநலத்தின்
         மாண்ட அறிவி னவர்

கலைஞர் குறல் விளக்கம்இயற்கையறிவும் மேலும் கற்றுணர்ந்த அறிவும் கொண்டவர்கள் பொதுமகளிர் தரும் இன்பத்தில் மூழ்க மாட்டார்கள்.

916. தந்நலம் பாரிப்பார் தோயார் தகைசெருக்கிப்
        புன்னலம் பாரிப்பார் தோள்

கலைஞர் குறல் விளக்கம்புகழ்ச்சிக்குரிய சான்றோர் எவரும், இகழ்ச்சிக்குரிய இன்பவல்லிகளின் தோளில் சாய்ந்து கிடக்க மாட்டார்.

917. நிறைநெஞ்சம் இல்லவர் தோய்வர் பிறநெஞ்சிற்
        பேணிப் புணர்பவர் தோள்

கலைஞர் குறல் விளக்கம்உள்ளத்தில் அன்பு இல்லாமல் தன்னலத்துக்காக உடலுறவு கொள்ளும் பொதுமகளிர் தோளை, உறுதியற்ற மனம் படைத்தோர் மட்டும் நம்பிக் கிடப்பர்.

918. ஆயும் அறிவினர் அல்லார்க் கணங்கென்ப
        மாய மகளிர் முயக்கு

கலைஞர் குறல் விளக்கம்வஞ்சக எண்ணங்கொண்ட “பொதுமகள் ” ஒருத்தியிடம் மயங்குவதை அறிவில்லாதவனுக்கு ஏற்பட்ட “மோகினி மயக்கம்” என்று கூறுவார்கள்.

919. வரைவிலா மாணிழையார் மென்தோள் புரையிலாப்
        பூரியர்கள் ஆழும் அளறு

கலைஞர் குறல் விளக்கம்விலைமகளை விரும்பி அவள் பின்னால் போவதற்கும் “நரகம்” எனச் சொல்லப்படும் சகதியில் விழுவதற்கும் வேறுபாடே இல்லை.

920. இருமனப் பெண்டிரும் கள்ளும் கவறும்
        திருநீக்கப் பட்டார் தொடர்பு

கலைஞர் குறல் விளக்கம்இருமனம் கொண்ட பொதுமகளிருடனும், மதுவுடனும், சூதாட்டத்தினிடமும் தொடர்பு கொண்டு உழல்வோரை விட்டு வாழ்வில் அமைய வேண்டிய சிறப்பு அகன்றுவிடும்.

MUST READ