Homeதிருக்குறள்94 – சூது, கலைஞர் மு. கருணாநிதி, விளக்க உரை

94 – சூது, கலைஞர் மு. கருணாநிதி, விளக்க உரை

-

- Advertisement -

94 – சூது, கலைஞர் விளக்க உரை, திருக்குறள்,

931. வேண்டற்க வென்றிடினும் சூதினை வென்றதூஉம்
        தூண்டிற்பொன் மீன்விழுங்கி அற்று

கலைஞர் குறல் விளக்கம்வெற்றியே பெறுவதாயினும் சூதாடும் இடத்தை நாடக்கூடாது.  அந்த வெற்றி, தூண்டிலின் இரும்பு முள்ளில் கோத்த இரையை மட்டும் விழுங்குவதாக நினைத்து மீன்கள் இரும்பு முள்ளையே கௌவிக் கொண்டது போலாகிவிடும்.

932. ஒன்றெய்தி நூறிழக்கும் சூதர்க்கும் உண்டாங்கொல்
        நன்றெய்தி வாழ்வதோர் ஆறு

கலைஞர் குறல் விளக்கம்ஒரு வெற்றியைப் பெற்ற மகிழ்ச்சியில் தொடர்ந்து ஆடி நூறு தோல்விகளைத் தழுவிக்கொள்ளும் சூதாடிகளின் வாழ்க்கையில் நலம் ஏற்பட வழி ஏது?

933. உருளாயம் ஓவாது கூறிற் பொருளாயம்
        போஒய்ப் புறமே படும்

கலைஞர் குறல் விளக்கம்பணையம் வைத்து இடைவிடாமல் சூதாடுவதை ஒருவன் பழக்கமாகவே கொள்வானேயானால் அவன் செல்வமும் அந்தச் செல்வத்தை ஈட்டும் வழிமுறையும் அவனைவிட்டு நீங்கிவிடும்.

934. சிறுமை பலசெய்து சீரழிக்கும் சூதின்
        வறுமை தருவதொன் றில்

கலைஞர் குறல் விளக்கம்பல துன்பங்களுக்கு ஆளாக்கி, புகழைக் கெடுத்து, வறுமையிலும் ஆழ்த்துவதற்குச் சூதாட்டத்தைப் போன்ற தீமையான செயல் வேறொன்றும் இல்லை.

935. கவறும் கழகமும் கையும் தருக்கி
        இவறியார் இல்லாகி யார்

கலைஞர் குறல் விளக்கம்சூதாடும் இடம், அதற்கான கருவி, அதற்குரிய முயற்சி ஆகியவற்றைக் கைவிட மனமில்லாதவர்கள் எதுவும் இல்லாதவர்களாகவே ஆகிவிடுவார்கள்.

936. அகடாரார் அல்லல் உழப்பர்சூ தென்னும்
        முகடியான் மூடப்பட் டார்

கலைஞர் குறல் விளக்கம்சூது எனப்படும் தீமையின் வலையில் விழுந்தவர்கள் வயிறார உண்ணவும் விரும்பாமல் துன்பத்திலும் உழன்று வருந்துவார்கள்.

937. பழகிய செல்வமும் பண்பும் கெடுக்கும்
        கழகத்துக் காலை புகின்

கலைஞர் குறல் விளக்கம்சூதாடும் இடத்திலேயே ஒருவர் தமது காலத்தைக் கழிப்பாரேயானால், அது அவருடைய மூதாதையர் தேடிவைத்த சொத்துக்களையும் நற்பண்பையும் நாசமாக்கிவிடும்.

938. பொருள்கெடுத்துப் பொய்மேற் கொளீஇ அருள்கெடுத்
         தல்லல் உழப்பிக்கும் சூது

கலைஞர் குறல் விளக்கம்பொருளைப் பறித்துப் பொய்யனாக ஆக்கி, அருள் நெஞ்சத்தையும் மாற்றித், துன்ப இருளில் ஒருவனை உழலச் செய்வது சூது.

939. உடைசெல்வம் ஊணொளி கல்வியென் றைந்தும்
        அடையாவாம் ஆயங் கொளின்

கலைஞர் குறல் விளக்கம்சூதாட்டத்திற்கு அடிமை யாக்கிவிட்டவர்களை விட்டுப் புகழும், கல்வியும், செல்வமும், உணவும், உடையும் அகன்று ஒதுங்கி விடும்.

940. இழத்தொறூஉம் காதலிக்கும் சூதேபோல் துன்பம்
        உழத்தொறூஉம் காதற் றுயிர்

கலைஞர் குறல் விளக்கம்பொருளை இழக்க இழக்கச் சூதாட்டத்தின்மீது ஏற்படுகிற ஆசையும், உடலுக்குத் துன்பம் தொடர்ந்து வரவர உயிர்மீது கொள்ளுகிற ஆசையும் ஒன்றேதான்.

MUST READ