வங்கதேசத்தில் இடஒதுக்கீட்டிற்கு எதிரான போராட்டம் மீண்டும் தீவிரமடைந்ததால் பிரதமர் பதவியிலிருந்து ஷேக் ஹசீனா ராஜினாமா செய்தார். இதனை அடுத்து, ராணுவத்தின் உதவியுடன் எதிர்க்கட்சிகள் இடைக்கால அரசை அமைக்க உள்ளன.
வங்கதேசத்தில் உள்நாட்டு போரில் பங்கேற்ற தியாகிகளின் உறவினர்களுக்கு, அரசு வேலையில் 30 சதவீத இடஒதுக்கீடு வழங்க எதிர்ப்பு தெரிவித்து கடந்த மாதம் மாணவர்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதில் 300-க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்ட நிலையில், இவ்விவகாரத்தில் உச்சநிதிமன்றம் தலையிட்டு சட்டத்தை நிறுத்தி வைத்தது. இதனால் சற்று ஓய்ந்திருந்த நிலையில், பிரதமர் பதவியிலிருந்து ஷேக் ஹசீனா விலக வலியுறுத்தி நேற்று மிண்டும் போராட்டம் வெடித்தது. இதில் 100-க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டனர்.
இந்த நிலையில், மாணவர்கள் உள்ளிட்டோரின் தீவிர போராட்டம் தொடர்ச்சியாக பிரதமர் ஷேக் ஹசீனா பதவியில் இருந்து இன்று ராஜினாமா செய்தார். டாக்கா அரண்மனையை விட்டு தனது சகோதரியுடன் வெளியேறி ராணுவ ஹெலிகாப்டரில் புறப்பட்டு சென்றார். இதனை அடுத்து, நாட்டு மக்களிடம் உரையாற்றிய வங்கதேச ராணுவ தளபதி, ஆட்சியை ராணுவம் கைப்பற்றியதாக அறிவித்தார். போராட்டங்கள் கட்டுக்குள் கொண்டுவரப்படும் என்று கூறினார். இதனிடை தொடர்ந்து, ராணுவத்தின் உதவியுடன் எதிர்க்கட்சியான வங்கதேச தேசியவாத கட்சி இடைக்கால ஆட்சி அமைக்க உள்ளது. இது தொடர்பாக ராணுவ தளபதியுடன் வங்கதேச தேசியவாத கட்சி ஆலோசனை மேற்கொண்டனர். பிரபல எழுத்தாளரும், பேராசிரியருமான சலிமுல்லா கான் தலைமையில் அமையும் இடைக்கால அரசில் முன்னாள் ராணுவ தளபதிகள், ஓய்வு பெற்ற நீதிபதிகள், மருத்துவர்கள் பங்கேற்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்நிலையில், டாக்காவில் இருந்து ராணுவ ஹெலிகாப்டரில் புறப்பட்ட பிரதமர் ஷேக் ஹசீனா, உத்தரபிரதேசத்தின் காசியாபாத் நகரில் உள்ள ஹிண்டன் இந்திய விமான படை தளத்தில் பாதுகாப்பாக தரையிறங்கினர். தொடர்ந்து, இந்திய அதிகாரிகள் அவருடைய பாதுகாப்பை கண்காணித்து வருகின்றனர். அவர், இந்தியாவில் இருந்து வேறொரு விமானத்தில் லண்டன் நகருக்கு செல்ல கூடும் என தெரிகிறது. ஆனால், அவருடைய ராணுவ போக்குவரத்து விமானம், அவரை லண்டனுக்கு கொண்டு செல்வது பற்றிய உடனடியான தகவல் எதுவும் தெளிவாக வெளிவரவில்லை. எனினும், டாக்காவில் இருந்து கேட்டு கொண்டதற்கேற்ப, ஹசீனாவின் விமானம் இந்திய வான்வழியே பாதுகாப்பாக கடந்து செல்வதற்கான வழியை ஏற்படுத்தி தருவது என இந்தியா முடிவு செய்துள்ளது