புதுச்சேரி, காரைக்காலுக்கு மார்ச் 7-ம் தேதி விடுமுறை
மாசி மகத்தையொட்டி 7ஆம் தேதி புதுச்சேரி மற்றும் காரைக்கால் பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
மாசிமகம் பெருவிழா
புதுச்சேரி மாநிலத்தில் ஆண்டுதோறும் மாசிமகம் பெருவிழா வெகு விமரிசையாக நடைபெறும். ஒவ்வொரு ஆண்டு மாசிமகம் திருவிழா, நடைபெறும் வைத்துக்குப்பம் கடற்கரையில் புதுச்சேரி மட்டுமில்லாது தமிழகத்தைச் சேர்ந்த ஏராளமான கோயில்களைச் சேர்ந்த உற்சவர்கள் கடற்கரையில் குவிந்து பக்தர்களுக்கு அருள் பாலித்து வருவார்கள். ஒரே இடத்தில் அனைத்து சாமிகளும் அருள் பாலிப்பதால் லட்சக்கணக்கான பக்தர்கள் மாசி மகத்திற்கு தங்கள் குடும்பத்துடன் வந்து சாமி தரிசனம் செய்வது வழக்கம்.

அந்த வகையில் 121-ஆம் ஆண்டு மாசி மக பெருவிழா வருகிற 7-ம் தேதி வைத்திக்குப்பம் கடற்கரையில் நடைபெற உள்ளது. இதனையொட்டி மாசிமகம் தீர்த்தவாரி பெருவிழாவை முன்னிட்டு பக்தர்கள் பாதுகாப்புக்காக சாமி தரிசனம் செய்ய அனைத்து ஏற்பாடுகளையும் மாவட்ட நிர்வாகம் சிறப்பாக செய்து வருகிறது. கோவில் சுவாமிகள் நிற்கும் இடத்திற்கு பந்தல் அமைப்பதும், சாமி தரிசனம் செய்ய வந்த பொதுமக்கள் கடற்கரையில் இறங்காத வகையில் தடுப்புகள் அமைப்பது உள்ளிட்ட பல பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மேலும் அசம்பாவித சம்பவங்கள் ஏதும் நடைபெறாமல் இருக்கவும், திருட்டு சம்பவங்களை தடுக்கவும், போலீஸ் தரப்பில் கண்காணிப்பு தீவிரபடுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
உள்ளூர் விடுமுறை
விழாவிற்கு வரும் பொதுமக்களுக்கு அத்தியாவசிய தேவையான குடிநீர் வசதி, கழிப்பறை வசதி மற்றும் சிசிடிவி கண்காணிப்பு கேமரா அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது. மேலும் மாசி மகம் தீர்த்தவரை நடைபெறும் 7-ம் தேதி அன்று புதுச்சேரி மாநிலத்தில் உள்ளூர் விடுமுறை விடப்பட்டுள்ளது.