‘பாலிடெக்னிக் மாணவர் சேர்க்கை விகிதம் குறைவு’-அமைச்சர் பொன்முடி
சட்டப்பேரவையில் நிதிநிலை மற்றும் வேளாண் நிதிநிலை அறிக்கை மீதான வினாக்கள் மற்றும் விடை நேரம் இரண்டாம் நாளாக நடைபெற்றது. அப்போது அந்தியூரில் பலவகை தொழில்நுட்ப கல்லூரி துவக்க அரசு முன்வருமா? என
அந்தியூர் எம்.எல்.ஏ வெங்கடாசலம் கேள்விக்கு எழுப்பினர்.

இதற்கு பதில் அளித்து பேசிய உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி, “தமிழ்நாட்டில் உள்ள பாலிடெக்னிக் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கை விகிதம் குறைந்துவிட்டது. பாலிடெக்னிக் கல்லூரிகளில் உள்ள 6,295 இடங்களில் 3,184 இடங்கள் காலியாக உள்ளது. தொழில்துறை 4.0 திட்டத்தில் பாலிடெக்னிக் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கையை அதிகரிக்க திறன்மிக மையங்கள் அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும்.

அந்தியூரில் அரசு பாலிடெக்னிக் கல்லூரி ஒன்றும், சுயநிதி பாலிடெக்னிக் கல்லூரி இரண்டும் உள்ளது. மொத்த மாணவர்களின் எண்ணிக்கை 1150. ஆனால் இந்த ஆண்டு சேர்ந்துள்ள மாணவர்களின் எண்ணிக்கை 438.. காலியிடங்களை நிரப்ப எதிர்காலத்தில் நடவடிக்கை எடுக்கப்படும். மாணவர்களுக்கு சிறப்பு பயிற்சி அளிக்க ஆசிரியர்களுக்கு 120 கோடி செலவில் சென்னை அம்பத்தூரில் உலகளாவிய திறன் பயிற்சி மையம் அமைக்கப்பட உள்ளது” எனக் கூறினார்.
