ஓபிஎஸ் தரப்பினர் தாக்கல் செய்த மனு நாளை விசாரணை
அதிமுக பொதுச் செயலாளராக செயல்பட எடப்பாடி பழனிச்சாமிக்கு தடை விதிக்க வேண்டும், தனி நீதிபதியின் உத்தரவுக்கு தடை விதிக்க வேண்டும் என்று சென்னை உயர் நீதிமன்றத்தில் ஓபிஎஸ் தரப்பினர் தாக்கல் செய்துள்ள மேல்முறையீட்டு மனுக்களின் மீதான விசாரணையை சென்னை உயர்நீதிமன்றம் நாளை ஒத்தி வைத்துள்ளது.
அதிமுகவின் ஜூலை 11 பொதுக் குழு தீர்மானங்களுக்கும், பொதுச் செயலாளர் தேர்தலுக்கும் தடை கோரி ஒ.பன்னீர்செல்வம், மனோஜ் பாண்டியன், வைத்திலிங்கம், ஜெ.சி.டி.பிரபாகர் ஆகியோர் தாக்கல் செய்த மனுக்களை நீதிபதி கே.குமரேஷ்பாபு தள்ளுபடி செய்து தீர்ப்பளித்தார். இந்த தீர்ப்பை ரத்து செய்யக் கோரியும், தடைவிதிக்கக் கோரியும் மேல்முறையீடு செய்ய இருப்பதாகவும், அந்த மனுக்களை அவசர வழக்காக விசாரிக்க வேண்டுமென பன்னீர்செல்வம் தரப்பினர் நீதிபதிகள் மகாதேவன், முகமது சபீக் அடங்கிய அமர்வில் உடனடியாக முறையீடு செய்தனர்.

அந்த மனுக்களை நாளை விசாரிப்பதாக நீதிபதிகள் தெரிவித்துள்ள நிலையில், பன்னீர்செல்வம், மனோஜ் பாண்டியன் தரப்பில் மேல்முறையீடு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. மனுக்களில், தனி நீதிபதியின் உத்தரவு முன்னுக்குப்பின் முரணாக உள்ளது என்றும், கட்சி விதிகளுக்கு எதிராக உள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளனர். தனி நீதிபதியின் உத்தரவுக்கு தடை கோரும் இந்த மேல்முறையீடு வழக்கில் உத்தரவு பிறப்பிக்கும் வரை அதிமுக பொதுச் செயலாளராக எடப்பாடி பழனிசாமி செயல்பட தடைவிதிக்கவும், தனி நீதிபதி உத்தரவுக்கு தடை விதிக்கவும் கோரிக்கை வைத்துள்ளனர்.
சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி மகாதேவன் மற்றும் முகமது ஷாபிக் அமரவும் முன்பு இன்று ஓபிஎஸ் மனு மட்டும் பட்டியலிடப்பட்டிருந்தது . இந்த நிலையில் விசாரணையின் போது அவரது சார்பில் ஆஜரான வழக்கறிஞர்கள் ,மனோஜ் பாண்டியன், வைத்திலிங்கம் மற்றும் ஜேசிடி பிரபாகர் ஆகியோர் தாக்கல் செய்த மனுக்களும் பட்டியலில் வரவேண்டும் என்பதினால் ஒட்டுமொத்தமாக வழக்குகளையும் நாளை விசாரணைக்கு எடுத்துக்கொள்ளும்படி கோரிக்கை விடுத்தனர். இதையடுத்து நீதிபதிகள் வழக்குகளை நாளை விசாரிப்பதாக தெரிவித்துள்ளனர்.