சென்னை: வங்கக்கடலில் புதிய காற்றழுத்த தாழ்வுப்பகுதி உருவாக வாய்ப்பு உள்ளதாக தனியார் வானிலை ஆய்வாளர் தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் கணித்துள்ளார்.
தமிழ்நாட்டில் மே மாத இறுதியில் தென்மேற்கு பருவமழை தொடங்கியுள்ள நிலையில் மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்களில் பருவமழை தீவிரமடைந்துள்ளது. இன்று முதல் மூன்று நாட்களுக்கு மழை தீவிரமடையும் என்று வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது.
சென்னையில் கடந்த 2 நாட்களாகவே பரவலாக மழை பெய்து வருகிறது. திருப்பத்தூர், வேலூர், ராணிப்பேட்டை, திருவண்ணாமலை, தர்மபுரி, கிருஷ்ணகிரி, சேலம், கள்ளக்குறிச்சி, அரியலூர், பெரம்பலூர், கடலூர் மற்றும் திருச்சி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யவாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் அளித்துள்ள பேட்டியில், ஜூன் 11,12ஆம் தேதிகளில் வங்கக் கடலில் புதிய காற்றழுத்த தாழ்வுப்பகுதி உருவாக வாய்ப்பு உள்ளதாக குறிப்பிட்டுள்ளார். இதன் காரணமாக வரும் இரண்டு நாட்களுக்கு பரவலாக மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.
வரும் 12ஆம் தேதியில் இருந்து மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதிகளில் படிப்படியாக மழை அதிகரிக்கும். சென்னையில் ஏற்கனவே பரவலாக மழை பெய்து வருகிறது. எனவே, வரும் 13ம் தேதி வரை சென்னையில் மழை தொடரும் எனவும் பிரதீப் ஜான் கூறியுள்ளார்.
தென்மேற்கு பருவமழை அக்டோபர் வரை நீடிக்கும் என்றும் நடப்பாண்டு பருவமழை அபரிமிதமாக இருக்கும் என்றும் இந்திய வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது குறிப்பிடத்தக்கது.