பாஜக கூட்டணியை உடைப்பதற்கான முயற்சி நிறைவேறாது என, அக்கட்சியின் மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் கூறியுள்ளார்.மிசா கால தியாகிகள் பொன்விழா நிகழ்ச்சி, சென்னையில் உள்ள பாஜக தலைமை அலுவலகமான கமலாலயத்தில் இன்று நடைபெற்றது. இந்த நிகழ்ச்சிக்கு பிறகு செய்தியாளர்களிடம் பேசிய நயினார் நாகேந்திரன், மிசா கால தியாகிகளுக்கான பொன்விழா நிகழ்ச்சியை தமிழக அரசு, முறைப்படி நடத்தி இருக்க வேண்டும் என்றார். அப்படி ஒரு நிகழ்ச்சியை நடத்தி, தியாகிகளை எல்லாம் அழைத்து பாராட்டுவதோடு, தங்களையும் அழைத்திருக்க வேண்டும் என, அவர் குறிப்பிட்டார். முதலமைச்சர் அதனை செய்யாததால், பாஜக தற்போது செய்திருப்பதாக நயினார் நாகேந்திரன் தெரிவித்தார்.

ரயில் கட்டணம் உயர்வு பற்றி முதலமைச்சர் பேசுவதற்கு முன்பு, கொடுத்த அறிவிப்புகளை எல்லாம் திமுக செய்துவிட்டதா என்று நினைத்து பார்க்க வேண்டும் என அவர் கேட்டுக் கொண்டார். மதுரையில் நடத்தப்பட்ட முருக பக்தர்கள் மாநாடு, வெற்றி பெற்றிருப்பதாக நாகேந்திரன் தெரிவித்தார். தேர்தலில் வெற்றி பெறும் அணி எதுவோ, அந்த அணியை நோக்கி பலரும் வருவார்கள் என குறிப்பிட்ட அவர், நடிகை மீனா உள்ளிட்ட யார் வந்தாலும் வரவேற்போம் என கேள்வி ஒன்றுக்கு பதிலளித்தார்.
தமிழகத்தில் பாஜக கூட்டணியை உடைப்பதற்கான முயற்சி நடைபெறுவதாக குற்றஞ்சாட்டிய நயினார், அந்த முயற்சி பலனளிக்காது என்றார். சென்னையில் கர்ப்பிணி பெண்ணும் மயிலாடுதுறையில் வணிகர் ஒருவரும் போலீசாரால் தாக்கப்பட்டது கண்டனத்துக்குரியது என நயினார் நாகேந்திரன் கூறினார்.